Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 28 - நா. பார்த்தசாரதி
மறுநாள் விசாரணைக்காக கோர்ட் கூடிய போது இந்த வழக்கின் தனித் தன்மையை உத்தேசித்து மேலும் சில சாட்சியங்களை விசாரிக்க விசேஷமாக அநுமதிக்க வேண்டும் என்றும், வழக்கை முடிவு செய்ய அது மிகமிக உபயோகமாக இருக்கும் என்றும் எதிர்த்தரப்பு வக்கீல் வேண்டியபோது வேணு மாமா எழுந்திருந்து அதை ஆட்சேபித்தார். ஆனால் நீதிபதி அதற்கு அனுமதியளித்ததோடு, "அவரது சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் வசதியும் உங்களுக்கு இருக்கும் போது கவலை எதற்கு?" என்று வேணு மாமாவுக்கு உணர்த்தினார்.
அன்றைக்கு எதிர்த்தரப்பு வக்கீல் என்னென்ன சாட்சியங்களை விசாரிப்பார் - வழக்கை எப்படி எப்படித் திரித்துக் கொண்டு போக முயல்வார் என்பதை எல்லாம் அப்போதே வேணு மாமாவால் ஓரளவு அநுமானம் செய்து கொள்ள முடிந்திருந்தது. சப்-ஜட்ஜ் கூறியது போல் எதிர்த்தரப்பு சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்து வகையாக மடக்கலாம் என்ற நம்பிக்கையோடு அதற்கு இசைந்து அமர்ந்தார் அவர்.
வழக்கு எப்படிப் போகிறதென்று அறியும் ஆவலுடன், கமலி, சர்மா, ரவி, வசந்தி எல்லாரும் அங்கே கோர்ட்டில் வந்து அமர்ந்திருந்தார்கள். பொது மக்களும் முதல் நாள் போலவே அன்றும் கூட்டமாக வந்திருந்தார்கள்.
இந்து சமயப் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் எதையும் கமலி அறியாதவள் என்பதை நிரூபிப்பதற்காகத் தயாரிக்கப்பட்டது போல் அமைந்திருந்தது முதல் சாட்சி.
சிவன் கோவில் பிரதான வாயிற் காவற்காரரான முத்து வேலப்ப சேர்வை என்பவர் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருநாள் மாலை கமலி காலில் செருப்புக்களுடன் கோயிலில் நுழைந்ததாகச் சாட்சியமளித்தார். அது நிர்ப்பந்தித்து வற்புறுத்தி வலுக்கட்டாயமாகத் தயாரித்த சாட்சி என்பது முதலிலேயே தெளிவாகத் தெரிந்தது.
வேணு மாமா அந்தக் கோயில் வாட்ச்மேனைக் குறுக்கு விசாரணை செய்தார். முதலில் அது நடந்த நாள் நேரம் முதலியவற்றை மறுபடி விசாரித்தார். வாட்ச்மேன் அதற்குப் பதில் கூறியபின்,