(Reading time: 13 - 25 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

முதல் சாட்சி கைலாசநாதக் குருக்கள், ஐம்பத்தெட்டு வயதானவர். சிவாகமங்களிலே தேர்ந்த ஞானமுள்ளவர். சங்கரமங்கலம் சிவன் கோவிலில் பிரதம அர்ச்சகராயிருந்தார் அவர்.

   

அவர் சாட்சிக் கூண்டில் ஏறிக் கடவுள் சாட்சியாக உண்மை பேசுவதாகச் சத்தியப் பிரமாணம் செய்த போது வேணு மாமா, சர்மா எல்லாருக்குமே மிகவும் வேதனையாயிருந்தது. இத்தனைப் பெரியவர், இவ்வளவு படித்தவர் பொய்ச் சாட்சி சொல்லத் துணிந்து வந்து விட்டாரே என்று உள்ளூற மனம் வருந்தினார்கள் அவர்கள்.

   

"அந்தப் பிரெஞ்சுப் பொண்ணுக்கு நம்ம சாஸ்திரம் சம்பிரதாயம் ஒண்ணும் தெரியாததோட அதை எல்லாம் அவ கொஞ்சமும் மதிக்காதவள்னும் தெரியறது. நான் சுவாமி சந்நிதியிலே அவளுக்குக் குடுத்த 'விபூதி - வில்வதளம்' எல்லாத்தையும் அவ உடனே காலடியிலே போட்டு மிதிச்சதை என் கண்ணாலேயே பார்த்தேன்" - என்று சாட்சியம் அளித்தார் கைலாசநாதக் குருக்கள்.

   

"குருக்களே! நீங்க இதை மனப்பூர்வமாகத்தான் சொல்றேளா? அல்லது ஏதாவது நிர்ப்பந்தத்துக்காகவா?"

   

-வேணு மாமா இப்படிக் கேட்கத் தொடங்கியதை எதிர்த்தரப்பு வக்கீல் ஆட்சேபணை செய்தார்.

   

அடுத்து மேலும் இரண்டு அர்ச்சகர்கள் இதே போல் கமலி கோயில் முறைகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டதாகவும், கோயில் பிரகாரத்தில் விவரந் தெரியாமல் அவள் அப்பிரதட்சணமாகச் சுற்றியதாகவும் சாட்சியம் அளித்தார்கள்.

   

"அப்படிப் பிரகாரத்தில் சுற்றும் போது அவள் தனியாயிருந்தாளா? வேறு யாராவது கூட இருந்தார்களா? எந்தத் தேதியன்று என்ன நேரத்தில் அது நடந்தது?" - என்று எல்லாரிடமுமே அடுத்தடுத்து ஒரே கேள்வியைக் கேட்டார் வேணு மாமா. எல்லாரும் ஒரே தேதி நேரம் கூறியதோடு கமலியைத் தாங்கள் தனியேதான் கோவிலில் பார்த்ததாகவும் தெரிவித்தார்கள். வேணு மாமா எல்லோரிடமும் ஏன் தேதி நேரம் கேட்கிறார் என்பது எதிர்த்தரப்பு வக்கீலுக்குப் புலப்படாமல் பெரிய புதிராயிருந்தது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.