அடுத்தபடியாகப் பஜனை மடம் பத்மநாப ஐயர், வேததர்ம பரிபாலன சபை காரியதரிசி ஹரிஹர கனபாடிகள், கர்ணம் மாத்ருபூதம், மிராசுதார் சுவாமிநாதன் ஆகிய நால்வரும் "கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள ரதி மன்மத சிற்பத்தின் கீழே அந்தச் சிற்பத்தில் எப்படி ரதியும் மன்மதனும் கட்டித் தழுவிக் கொண்டிருந்தார்களோ அதே போலக் கமலியும், ரவியும் பகிரங்கமாகக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததாகவும் நாலு பேராகச் சேர்ந்து தரிசனத்துக்காகப் போயிருந்த தங்கள் கண்களில் கோயிலின் புனிதத் தன்மைக்குப் பொருந்தாத இந்த அருவருக்கத்தக்க ஆபாசக் காட்சி தென்பட்டதாகவும்" ஒவ்வொருவராகக் கூண்டிலேறிச் சாட்சி கூறினார்கள். இந்த ஆபாசக் காட்சியைக் கண்டு அந்தச் சமயத்தில் பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்த மற்ற ஆஸ்திகர்களின் மனம் புண்பட்டு அவர்கள் வருந்திக் கூறியதைத் தாங்கள் கேட்டதாகவும் மேலும் சாட்சிகள் தெரிவித்தார்கள். அதைக் கேட்டுக் கமலி, ரவி, சர்மா, வசந்தி ஆகியோருக்கு அந்த அபாண்டப் பழியையும் புளுகையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் நெஞ்சு குமுறியது. வேணு மாமா மட்டும் புன்முறுவலோடு எழுந்திருந்து தன் குறுக்கு விசாரணையைத் தொடங்கினார். அந்த நான்கு பேரிடமும் கிளிப்பிள்ளை போல ஒரே கேள்வியைத் தான் திரும்பத் திரும்பக் கேட்டார் அவர்:
"ரதி மன்மத சிற்பம் சங்கரமங்கலம் சிவன் கோவிலின் எத்தனையாவது பிரகாரத்தில் இருக்கிறது? எந்தத் தேதியில் எந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது?"
"ரதி, மன்மத சிற்பம் சிவன் கோவிலின் இரண்டாவது பிரகாரத்தின் வடக்கு மூலையில் இருக்கிறது" என்று சொல்லிவிட்டுத் தேதியும் நேரமும் சொல்லத் தயங்கினார், முதலில் குறுக்கு விசாரணைக்கு ஆளான பஜனை மடம் பத்மநாப ஐயர்.
உடனே வேணு மாமா, "காலில் செருப்புடன் நுழைந்ததாக வாட்ச்மேன் சொன்ன அதே தேதியில் தான் இதுவும் நடந்ததா? அல்லது வேறு தேதியா?" - என்று குறுக்கிட்டு விசாரித்தார்.
"வாட்ச்மேன் கூறிய சம்பவம் நடந்த அதே தேதியில் அதே நேரத்தில்தான் இதுவும் நடந்தது" - என்று சாட்சியிடமிருந்து பதில் கிடைத்தது. மற்ற மூன்று சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்தபோதும் இதே பதில்தான் அவர்களிடமிருந்து கிடைத்தது.