சார்பில் கூறப்பட்ட வாதத்திற்குப் போதிய ஆதாரமில்லாமற் போகவே நீதிபதி அதை ஏற்கவில்லை. முற்றிலும் எதிர்பாராத விதமாக இந்தக் காஸெட் ரெக்கார்டர் சாட்சியம் வரவே குருக்கள் மூவரும் ஸ்தம்பித்துப் போய்விட்டனர். அதன்பின் அவர்களால் எதையும் மறுக்க முடியவில்லை. மேற்கொண்டு புதிய பொய்களைப் பேசும் திராணியோ அல்லது தெம்போ அப்போது அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
மிகவும் 'டிரமடிக்' ஆக அந்தக் காஸெட் ரெக்கார்டர் சாட்சியத்தை வழக்கில் கொண்டு வந்து அனைவரையும் திணற அடித்திருந்தார் வேணு மாமா. சாட்சிகளும் இதை எதிர்பார்க்கவில்லை. எதிர்த்தரப்பு வக்கீலும் இதை எதிர்பார்க்கவில்லை. தங்களுடைய பலவீனமான ஒரு பேச்சு இப்படிப் பதிவு செய்யப்பெற்று வைக்கப்பட்டிருக்கிறது என்பது சாட்சிகளுக்கே தெரியாமலிருந்ததுதான் அதிலிருந்த இரகசியம். இந்தத் திருப்பம் வழக்கின் போக்கையே மாற்றிவிட்டது. எதிர்த்தரப்பு வக்கீலுக்கு ஏறக்குறைய நம்பிக்கையே போய்விட்டது.
எதிர்த்தரப்பு வக்கீலின் முகம் வெளிறியது. காஸெட் ரெக்கார்டர் சாட்சியம் முடிந்தவுடன் வேணு மாமா தமது கட்சிக்காரர் ஸௌந்தர்ய லஹரி கனகதாரா ஸ்தோத்திரம், பஜ கோவிந்தம் முதலிய நூல்களை பிரெஞ்சு மொழியில் பெயர்த்திருப்பதையும் அதற்காக இந்து மதாசாரியர்களான மகான்களின் ஆசியையும், பாராட்டையும் அவர் பெற்றிருப்பதையும் கூறி ஸ்ரீ மடம் மானேஜர் அது சம்பந்தமாகச் சர்மாவுக்கு எழுதியிருந்த கடிதத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
ரதி மன்மத சிற்பத்தின் கீழ்க் கமலியும் ரவியும் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருந்ததாகவும் பஜனை மடம் பத்மநாப ஐயர் முதலியோர் கூறிய சாட்சியத்தை வேணு மாமா மிகச் சுலபமாகவே மறுக்க முடிந்தது. அவர்கள் சொன்ன தேதி நேரமும், வாட்ச்மேன் கமலி செருப்புக் காலுடன் கோவிலுக்குள் நுழைந்ததாகக் கூறிய தேதி நேரமும், குருக்கள் அவள் பிரசாதத்தைக் காலடியில் போட்டு மிதித்ததாகக் கூறிய தேதியும் நேரமும் - ஒன்றாக இருப்பதைச் சுட்டிக்காட்டி "முன் இரு சாட்சிகளும் அந்த நாளில் அதே நேரத்தில் கமலி மட்டும் தான் தனியாகக் கோயிலுக்குள் வந்தாள் என்று கூறும்போது மற்றவர்கள் அவள் ரவியோடு ரதிமன்மத சிற்பத்தின் கீழ் அலங்கோலமாகச் சேர்ந்து நின்றதைப் பார்த்ததாக கூறுவது கட்டுக்கதை. சாட்சியங்கள் முரண்படுகின்றன. அதை எல்லாம் விடப் பெரிய விஷயம் இந்த சாட்சிகள் சிவன் கோவிலுக்குப் போய் வருடக்கணக்கில் ஆகிறதென்றும் கோயிலில் எது எங்கிருக்கிறது என்றே இவர்களுக்கு மறந்து போய்விட்டது என்றும் இவர்கள்