கடைசியாக ஒரு தர்மகர்த்தர் சாட்சியம் அளித்தார்.
"கோவில் திருப்பணிக்கு என்று கமலியின் பேரில் அளிக்கப்பட்ட ரசீது கமலியால் நேரில் பணம் கொடுத்து வாங்கப்பட்டது அன்று என்றும் வேறு ஒருவர் பணத்தைக் கொடுத்து கோயிலுக்கு வராமல் வெளியிலேயே கமலியின் பெயருக்கு அந்த ரசீதை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும்" - என்றும் அவரது சாட்சியத்தில் கூறப்பட்டது. ரசீதிலிருக்கும் கையெழுத்தும் தம்முடையதுதான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். உடனே வேணு மாமா எழுந்திருந்து,
"ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நன்கொடை வசூலுக்கான ரசீதுகளைத் தவிர நூறு ரூபாய்க்கு மேற்பட்ட வசூல் வேலையைத் தேவஸ்தான ஆபீஸே கோவிலுக்குள் வைத்துத்தான் செய்ய வேண்டும் என்று திருப்பணி நிதி வசூல் குழுவில் தீர்மானம் போட்டீர்களா இல்லையா?" - என்று கேட்டு மடக்கியதும் தர்மகர்த்தா திணறிப் போனார். நிதி வசூல் குழுவில் போடப்பட்ட அந்த இரகசியத் தீர்மானம் இவருக்கு எப்படித் தெரிந்தது என்பதே அவரது திணறலுக்குக் காரணம். 'கமலி கோவிலுக்குள் வந்து தேவஸ்தான அலுவலரிடம் பணத்தைச் செலுத்தி அந்த ரசீதை வாங்கவில்லை. வெளியே யாரோ அவள் பெயரில் பணத்தைக் கட்டி வாங்கிய ரசீது அது' - என்ற தமது பொய்ச் சாட்சியம் அடிபட்டுப் போனதைத் தர்மகர்த்தா அந்த நிமிஷமே உணர்ந்தார்.
வற்புறுத்தித் தயாரிக்கப்பட்ட எல்லாச் சாட்சியங்களும் தவிடு பொடியாகும்படி வாதத்தைத் தொடர்ந்தார் வேணு மாமா.
"கனம் கோர்ட்டாரவர்களே! கைலாசநாதக் குருக்கள் முதலிய மூவரும் நிர்ப்பந்தத்துக்குப் பயந்து இங்கே இதுவரை பொய்ச் சாட்சி சொன்னார்கள் என்பதை இதோ இந்த ஒலிப்பதிவு நிரூபிக்கும்!" - என்று சொல்லி காஸெட் ரெக்கார்டரை எடுத்து 'ஆன்' செய்தார் வேணு மாமா. எள் போட்டால் எள் விழுகிற ஓசை கேட்கும் அவ்வளவு அமைதியோடு கோர்ட்டு அதைக் கேட்டது. அந்த எதிர்பாராத ஒலிப்பதிவுச் சாட்சியம் அனைவரையுமே பிரமிக்க வைத்து விட்டது.
டேப் ஒருமுறை ஓடி முடிந்ததும் சாட்சியத்துக்குப் பயன்படும் பகுதியை மறுமுறையும்