"அப்படித் தரிசனத்துக்கு வந்தபோது கமலி தனியாக வந்தாளா? வேறு யாரும் உடன் வந்தார்களா?" என்று கேட்டார்.
"வேறு யாரும் உடன் வரவில்லை" என்று அவனிடமிருந்து பதில் வந்தது.
"உன் கடமைப்படி நீ காலில் செருப்புடன் உள்ளே போகக் கூடாது என்று அவளைத் தடுத்தாயோ இல்லையோ?"
"நான் தடுக்கத்தான் தடுத்தேன். ஆனால் அவங்க 'அப்பிடித்தான் போவேன்'னு - என்னை மீறி உள்ளே நுழைஞ்சிட்டாங்க."
"நீ எந்த மொழியில் தடுத்தாய்? அவங்க எந்த மொழியில் மாட்டேன்னு பதில் சொன்னாங்க..."
"நான் தமிழ்லேதான் சொல்லித் தடுத்தேன். அவங்க தான் என்னமோ புரியாத பாஷையிலே பேசினாங்க."
"புரியாத பாஷையிலே பேசினாங்கன்னு சொல்றியே? அப்பிடியானால் அவுங்க சொன்னது, 'செருப்பைக் கழற்றாமே அப்பிடித்தான் உள்ளே போவேன்'னு அர்த்தமுள்ளதா உனக்கு எப்பிடிப் புரிஞ்சுது...?"
"இல்லீங்க அவங்க... தமிழ்லேதான் பேசினாங்க..."
"முதல்லே புரியாத பாஷையிலே பேசினாங்கன்னு நீ சொன்னது நிஜமா? அல்லது இப்போ தமிழ்லே தான் பேசினாங்கன்னு சொல்றியே, இது நிஜமா?"
திகைத்துப் போன சாட்சி முழித்தார். பதில் சொல்லவில்லை. கூண்டில் கையைப் பிசைந்து கொண்டு நின்றார். வேணு மாமா குறுக்கு விசாரணையை முடித்துக் கொண்டு தமது இடத்தில் போய் அமர்ந்தார். தம்முடைய அடுத்த சாட்சிக்கு ஆயத்தமானார் எதிர்த்தரப்பு வக்கீல்.
அடுத்து சிவன் கோவில் அர்ச்சகர்கள் மூவரும் ஒவ்வொருவராகச் சாட்சி சொல்ல வந்தார்கள்.