விட்டார்கள். மேற்கொண்டு விசாரிப்பதற்கு இனி எதுவுமில்லை. கனம் கோர்ட்டாரவர்கள் நியாயம் வழங்கிப் பாதிக்கப்பட்ட கோவில்கள் சுத்தி செய்யப்பட்டுச் சம்ப்ரோட்சணம் நடைபெற வழி செய்து கொடுக்க வேண்டும்" என்று வழக்குத் தொடுத்திருந்தவர்களின் வக்கீல் தம் வாதத்தைத் தொகுத்து முடித்தார்.
அப்போது வேணு மாமா கமலிக்கும் சர்மாவுக்கும் வக்கீல் என்ற முறையில் எழுந்திருந்து அந்த வாதத்தை ஆட்சேபித்தார். அவர் தரப்பு வாதத்தை அவர் எடுத்துச் சொல்லலாம் என்று சப்-ஜட்ஜ் கூறவே வேணு மாமா மேலும் தொடர்ந்தார்.
"இதை நான் ஆட்சேபிக்கிறேன். கமலி எந்த அந்நிய மதத்தையும் சேர்ந்தவள் இல்லை. அவள் பல ஆண்டுகளாக இந்து மதத்தையும் இந்து கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையுமே அனுஷ்டித்து வருகிறாள்."
வேணு மாமா இவ்வாறு கூறியவுடன் கமலி அந்நிய மதத்தினள் இல்லை என்பதற்கும், இந்துப் பழக்க வழக்கங்களையே அவள் அனுசரித்து வருகிறாள் என்பதற்கும் போதிய சாட்சியங்கள் வேண்டும் என்று எதிர்த் தரப்பு வக்கீல் கேட்டார்.
சாட்சியங்கள் இப்போதே தயார் என்றும் கோர்ட்டார் விரும்பினால் அவர்களை ஒவ்வொருவராக ஆஜர்படுத்த முடியும் என்றும் வேணு மாமா நீதிபதியை நோக்கிக் கூறினார். நீதிபதி சாட்சியங்களை ஆஜர்ப்படுத்தி நிரூபிக்குமாறு கோரவே முதல் சாட்சியாகச் சங்கரமங்கலம் 'செயிண்ட் ஆண்டனீஸ் சர்ச்' பாதிரியாரை அழைத்தார் வேணு மாமா.
கமலி என்ற அந்தப் பிரெஞ்சு யுவதியை ஒருநாள் கூடத் தான் சர்ச்சில் பிரேயருக்காக வந்து பார்த்ததில்லை என்றும் மாறாகப் புடவை குங்குமத் திலகத்துடன் பிள்ளையார் கோயில், சிவன் கோயில் வாசல்களில் அடிக்கடி பார்த்திருப்பதாகவும் பாதிரியார் சாட்சி சொன்னார். எதிர்த் தரப்பு வக்கீல் பாதிரியாரிடம் ஏதோ குறுக்கு விசாரணைக்கு முயன்றார். ஆனால் அது அப்போது பயனளிக்கவில்லை.
அடுத்து, ரவி கூண்டிலேறிச் சாட்சி சொன்னான். பிரான்ஸில் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் இந்திய இயல் பேராசிரியன் என்ற முறையில் மாணவியாக அவளைச் சந்தித்த நாளிலிருந்து கமலி இந்துக் கலாசாரத்தில் ஈடுபாடுள்ள பெண்ணாய் இருப்பதாக ரவியின் சாட்சியம்