விரும்புகிறேன்.
"தவிர நேற்றும் இன்றும் அதே கோவில்களில் முறைப்படி பூஜை புனஸ்காரம், பொது மக்களின் தரிசனம் எல்லாம் வழக்கம் போல் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வழக்குத் தொடுத்திருப்பவர்கள் தெரிவித்திருப்பது போல் என் கட்சிக்காரர் சென்று தரிசித்ததால் பாதிப்பு ஏற்பட்டுப் பொது மக்கள் உபயோகத்துக்குப் பயன்படாதபடி இதில் எந்தக் கோவிலும் இழுத்து மூடிப் பூட்டப்பட்டு விடவில்லை என்பதையும் கனம் கோர்ட்டார் கவனிக்க வேண்டும்."
-இந்த இடத்தில் எதிர்த் தரப்பு வக்கீல் எழுந்திருந்து பலமாக ஆட்சேபிக்க முற்பட்டார், அதை நீதிபதி ஏற்காததால் வேணு மாமாவே தொடர்ந்தார்.
"மேலும் எனது கட்சிக்காரரை இந்த ஆலயங்களும் இவற்றைச் சேர்ந்தவர்களும் இதன் தர்மகர்த்தாக்களும் பரம ஆஸ்திகராகவும், மரியாதைக்குரிய இந்துவாகவும் சந்தேகத்துக்கிடமில்லாதபடி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதோ இந்த ரசீதே போதிய சாட்சியமாகும். சிவன் கோவிலின் புனருத்தாரணத் திருப்பணிக்கு இந்து ஆஸ்திகர்களிடம் கேட்டு வாங்கும் நன்கொடைக்காக அளிக்கப்படும் இரசீதுகளில் இதுவும் ஒன்று. இதில் இந்த ஆலய தர்மகர்த்தாவின் கையெழுத்துக்கூட இருக்கிறது. வேடிக்கையாகவும் முரண்பாடாகவுமுள்ள ஒரு விஷயம் என்னவென்றால் அதே தர்மகர்த்தா இந்த வழக்கைத் தொடுத்திருப்பவர்களில் ஒருவராகவுமிருக்கிறார். என் கட்சிக்காரர் ஆலயத்திற்குள்ளேயே நுழையத் தகுதியற்றவர் என இவர்கள் கருதியிருப்பது மெய்யானால் அர்த்த மண்டபம் வரை உள்ளே வர அனுமதித்து ரூபாய் ஐநூறு நன்கொடையும் பெற்றுக்கொண்டு அவளிடம் இந்த ரசீதைக் கொடுத்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்த ரசீதில் 'இந்து ஆஸ்திகர்களிடமிருந்து கோயில் திருப்பணிக்காக நன்கொடையாய்ப் பெற்ற தொகைக்கு இரசீது' என்று வேறு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பணம் தேவைப்படுகிறபோது மட்டும் இந்து ஆஸ்திகராக ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒருவரைத் தரிசனத்துக்கு வரும்போது மட்டும் அந்நிய மதத்தினர் என்று தவறாகக் கருதி ஒதுக்குவது என்ன நியாயம்? எனது கட்சிக்காரர் தரிசனத்துக்குப் போயிருந்தபோது தான் இந்த நன்கொடையை ஆலயத் திருப்பணிக்கு அளித்திருக்கிறார் என்பதைக் கோர்ட்டாரவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த நன்கொடையை வாங்கும்போதோ இதற்காக இரசீது கொடுக்கும்போதோ எனது கட்சிக்காரர் கோவிலுக்குள் நுழைந்தால் கோவில் புனிதம் கெட்டு 'சம்ப்ரோட்சணம்' செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என ஆலய