"நான் உங்களை எல்லாம் வரச் சொன்னது இதைப் பத்திப் பேசறதுக்கில்லே. இவ ஏதோ ரெண்டு மூணு பிராமணாளுக்கு வஸ்திர தானம் பண்ணனும்னா, அதுக்காகத்தான் உங்களை எல்லாம் வரச்சொல்லி அனுப்பினேன்" - என்று கமலியைக் கூப்பிட்டு ஜாடை காட்டினார். மூன்று பெரிய பிளாஸ்டிக் தட்டுகளில் தயாராக வெற்றிலைப் பாக்குப் பழத்துடன் எடுத்து வைக்கப்பட்டிருந்த கோடி வேஷ்டி அங்கவஸ்திர செட்டுக்களைக் கமலியே அவர்கள் ஒவ்வொருவருக்காகக் கொடுத்துவிட்டு மிகவும் பவ்யமாகக் குனிந்து அவர்களை வணங்கினாள் அவர்களும் ஆசீர்வாதம் செய்தார்கள். அவர்கள் சென்ற பின் விளக்கு வைத்திருந்த மணைப் பலகைக்கு அடியிலிருந்து காஸெட் ரெக்கார்டரை எடுத்து 'ரீ வைண்டிங் பட்ட'னை அமுக்கி ரீவைண்ட் செய்து மறுபடி போட்டுப் பார்த்ததில் எல்லாம் கச்சிதமாகப் பதிவாகி இருந்தது. கேஸ் விசாரணைக்கு வருவதற்கு முன்பே மற்ற சாட்சிகளையும் வரவழைத்துப் பேசிவிட்டார் வேணு மாமா.
*****
விசாரணை நாள் வந்தது. ஏற்கெனவே தினசரிப் பத்திரிகைகளில் பிரமாதப்படுத்தப்பட்டுத் தடபுடலாகி இருந்ததனால் அன்று சப்-கோர்ட்டில் ஏகக்கூட்டம். சப்-ஜட்ஜ் ஆசனத்தில் வந்து அமர்ந்ததும் விசாரணை தொடங்கிற்று.
"நீர் உமது வீட்டிலே கமலியை விருந்தினராகத் தங்க வைத்துக் கொண்டதும், அவள் சங்கரமங்கலத்திலும் சுற்றுப் புறத்திலும் உள்ள இந்த ஆலயங்களைத் தரிசிக்க அவளுக்கு உதவி செய்ததும் உண்மைதானா?" என்று சர்மாவை விசாரித்தார் எதிர்தரப்பு வக்கீல். சர்மா உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார். கமலி சாட்சி சொல்லுமுன் சத்தியப் பிரமாணத்துக்காக அவர்கள் பைபிளை எடுத்துக் கொடுக்க - அவள் தானே பகவத் கீதையைக் கேட்டு வாங்கிப் பிரமாணத்தைச் செய்துவிட்டுத் தனது சாட்சியத்தைத் தொடங்கினாள்.
"இந்துக் கோவில்களில் தரிசிக்கப் போனது உண்மைதானா?" என்று கமலியிடம் கேட்கப்பட்டது. கமலி ஒரே வாக்கியத்தில் 'உண்மைதான்' - என்று மறுக்காமல் அதை ஒப்புக் கொண்டுவிட்டாள்.
"அப்படியானால் வேலை மிகவும் சுலபமாகப் போயிற்று. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இருவருமே தாங்கள் செய்தவற்றை மறுக்காமல் செய்ததாக அப்படியே ஒப்புக் கொண்டு