மனசிலே ஒண்ணும் வச்சிக்காமே வந்து சந்தோஷமாக் கல்யாணத்தை நடத்திக் குடுங்கோ. இது உங்காத்துக் கல்யாணம்" என்று வசந்தி வேண்டியபோது அதற்கு உற்சாகமாகவோ எதிராகவோ இசைவாகவோ பதில் சொல்லாததாலும் வசந்தியே மேற்கொண்டு அதை வற்புறுத்தவில்லை.
"எல்லாம் ரொம்ப லட்சணமாகத்தான் இருக்குடி உங்க காரியம்! பிள்ளைக்கு அம்மா இங்கே இப்பிடிக் கிழிச்ச நாராக் கெடக்கறா, நீங்க பாட்டுக்கு அங்கே ஜாம் ஜாம்னு மேளதாளத்தோட கல்யாணத்தை நடத்திண்டிருக்கேளே!" என்று முத்து மீனாட்சிப் பாட்டியும் கிராமத்திலிருந்து வந்திருந்த காமாட்சியம்மாளின் பெரியம்மாவும் வசந்தியிடம் குறைப்பட்டு அலுத்துக் கொண்டார்கள். ஆனால் காமாட்சியம்மாள் உற்சாகமாக இல்லையென்றாலும் அப்போது வசந்தியைச் சினந்தோ கடிந்தோ எதுவும் பதில் சொல்லவில்லை. அதே சமயம் காமாட்சியம்மாளின் அந்த பதிலில் எந்த இசைவும் கூடத் தெரியவில்லை.
"நான் தான் இப்படிக் கெடக்கிறேனே? எங்கே வரது? எதுக்குப் போறது?" - என்று கிணற்றுக்குள்ளிருந்து வருவதுபோல வார்த்தைகள் தளர்ந்து நலிந்து வெளி வந்தன அவளிடமிருந்து.
"தொடங்கறச்சேயே அச்சான்யம் மாதிரி அபசகுனமாக் கல்யாணப் பந்தல்லே நேத்து ராத்திரி தீப்பிடிச்சுடுத்தாமேடீ?" - என்று முத்துமீனாட்சிப் பாட்டி நீட்டி முழக்கிக் கொண்டு ஆரம்பித்தாள். வசந்தி அதற்குப் பதில் சொல்லவில்லை. மனிதர்களின் சூழ்ச்சியால் நடைபெறும் காரியங்களுக்கு எல்லாம் அச்சான்யம், அபசகுனம் என்று பெயர் சூட்டிவிடும் பழங்கால மனப்பான்மையை எண்ணி வியந்தாள் வசந்தி. முன்பு சர்மா வீட்டு வைக்கோற் படைப்பில் தீப்பற்றிய போதும் இதே போலத்தான் கமலியின் தலையில் அந்தப்பழி போடப்பட்டது என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. காமாட்சியம்மாள் கல்யாணத்துக்கு வருகிற நிலையில் இல்லை என்று தெரிந்ததுமே அவள் அங்கே அதிக நேரம் தங்கவில்லை. ஊர் முறைப்படி மீண்டும் காலையில் வீடுவீடாக நேரில் சென்று அழைக்க வேண்டியவர்களை அழைத்துவிட்டுத் திரும்பினாள். கமலி-ரவி மேலிருந்த சீற்றம் இயற்கையாகவே காமாட்சியம்மாளிடம் இப்போது தணிந்திருக்கிறதா அல்லது உடல் நிலையின் தளர்ச்சி காரணமாகக் குறைந்திருக்கிறதா என்பதை வசந்தியால் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. எனினும் கல்யாணத்துக்கு அழைக்கப்போன தன்னிடம் சீறி விழுந்து வசைமாரி பொழியக்கூடும் என்று தான் எதிர்பார்த்ததற்கு மாறாகக் காமாட்சியம்மாள் நிதானமாகவே நடந்து கொண்டது வசந்திக்கு