மொறைன்னு ஒன்னு இருக்கோல்லியோ? அவாளாத் தேடிண்டு வந்து உன்னை நமஸ்காரம் பண்ண வேண்டாமோ?" இதைக் கேட்டுக் காமாட்சியம்மாளுக்குக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. அழுகையை அடக்க முடியவில்லை. அந்தக் கல்யாணத்தைப் பொருட்படுத்தாதவள் போலவும், புறக்கணித்தாற்போலவும் அவள் பாசாங்கு பண்ணினாலேயொழிய, மனம் என்னவோ அங்கேதான் இருந்தது. ஒவ்வொரு விநாடியும் அங்கே அந்தக் கல்யாண வீட்டில் என்னென்ன நடக்கும் என்பதைப் பற்றித்தான் அவள் மனம் சதா கற்பனை செய்து கொண்டிருந்தது. ரவியையும், கமலியையும், வசந்தியையும், சர்மாவையும், கல்யாண வீட்டையும் பற்றியே அவள் உள் மனம் நினைத்து உருகிக் கொண்டிருந்தது. கல்யாண வீட்டைப் பற்றி முத்து மீனாட்சிப் பாட்டியும், பெரியம்மாவும் எதையாவது கூறிய போதெல்லாம் சிரத்தையின்றிக் கேட்பது போல் மேலுக்குக் காட்டிக் கொண்டாளே தவிர அவற்றை உண்மையில் அவள் மிகவும் சிரத்தையோடு கூர்ந்து விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
நான்கு நாளும் ஔபாசனம், ஊஞ்சல், நலங்கு - நிறைவு நாளன்று மாப்பிள்ளை பெண்ணுடன், கல்யாண வீட்டார் ஊர்வலமாகப் போய் அகஸ்திய நதியில் 'பாலிகை' கரைக்கப் போகிறார்கள் - என்று ஒவ்வொன்றாகக் கலியாண வீட்டுத் தகவல்களை அறிந்து வந்து காமாட்சியம்மாளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள் முத்துமீனாட்சிப் பாட்டி. ஒரு விஷயம் பற்றிக் காமாட்சியம்மாளே ஞாபகமாகப் பாட்டியை விசாரித்தாள்:
"கிருஹப் பிரவேசம்னு ஒண்ணு உண்டே, அதை என்னிக்கு வச்சிக்கப் போறாளாம் பாட்டீ?"
"நான் அதை ஒண்ணும் விசாரிக்கல்லேடீ காமு!"
"விசாரியுங்கோ, அன்னிக்கி எல்லாரும் இங்கேதானே வருவா... நாம தடுக்க முடியாதே... அவா வீடு, அவா வாசல், நாம என்ன பண்ண முடியும்?"
"அதுவும் அப்படியா சமாசாரம்? எனக்கு அது நெனைவே இல்லையேடீ?" - என்றாள் பெரியம்மா. அன்று மாலையிலேயே முத்துமீனாட்சிப் பாட்டி அந்தத் தகவலை விசாரித்துக் கொண்டு வந்து சொன்னாள்:
"பாலிகை கரைச்ச மத்தா நாள் கிருஹப் பிரவேசத்துக்கு ஏத்ததா இருக்காம்டீ காமு! அதனாலே