இருவரும் உயிர் நண்பர்களாகி விட்டோம்! உன்னோடு இன்று நான் அடையும் சிநேகிதத்திலிருந்து இனி என்றும் பிரிக்கப்பட்டவனாக மாட்டேன். என்னுடைய சிநேகிதத்திலிருந்து நீயும் பிரிக்கப் பட்டவளாக மாட்டாய். நாம் இருவரும் ஒன்றுபட்டவர்களாவோம். நாம் இனிமேல் செய்யவேண்டிய அனைத்திற்கும் இன்னின்னவற்றை இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று ஒன்றாகச் சங்கல்பம் பண்ணிக்கொண்டு நாம் செயற்படுவோம். ஒத்த மனத்தோடு பிரியமுள்ளவர்களாகவும் ஒருவர்க்கொருவர் பிரகாசிப்பவர்களாகவும், நல்லெண்ணம் உடையவர்களாகவும், உணவையும், பலத்தையும் சேர்ந்தே அநுபவிக்கிறவர்களாகவும் வாழ்வோம். எண்ணங்களால் நாம் ஒத்த கருத்துடையவர்களாவோம். விரதங்களையும் நோன்புகளையும், சேர்ந்தே அனுஷ்டிப்போம். நம்முடைய விருப்பங்கள் ஒத்தவையாக இருக்கட்டும். நீ 'ரிக்' வேதம் ஆகவும் நான் 'ஸாம' வேதம் ஆகவும் இருப்போம். நான் விண்ணுலகமாக இருக்கிறேன். நீ பூமியாக இருக்கிறாய். நான் வித்துக்களாகவும் நீ விதைக்கப்படும் நிலமாகவும் இருக்கிறோம்! நான் சிந்தனை! நீ சொல்! என்னுடையவளாக என்னை அனுசரித்தவளாக நீ ஆவாய்! பிள்ளை பேற்றுக்காக, வற்றாத செல்வத்துக்காக இன்சொல்லுக்கு உரியவளே, நீ என்னுடன் வருக."
என்ற பொருளுள்ள 'ஸப்தபதி'யைக் கேட்டுக் கமலி ரவியை நோக்கிப் புன்முறுவல் பூத்தாள். நான்கு நாள் மாலையும், ஊஞ்சல் நலுங்கு வைத்துப் பாடுதல் முதலிய பெண்களின் சடங்குகள் எல்லாம் குறைவில்லாமல் அந்தக் கலியாணத்தில் இருந்தன. ஒவ்வொரு சடங்கிலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், கமலி பெருமகிழ்ச்சி அடைந்தாள். ஒரு கிராமாந்தரத்துக் கலியாணத்தில் உள்ள சின்னச் சின்ன மகிழ்ச்சிகளும் சுவாரஸ்யங்களும், உல்லாஸங்களும், சந்தோஷங்களும் சிலிர்ப்புக்களும் சிரிப்புக்களும் அந்தத் திருமணத்திலும் இருந்தன. கண்ணுக்கு மையிட்டுக் கைகளுக்கும் கால்களுக்கும் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிக் கூந்தலைச் சவுரி வைத்து நீளப் பின்னிப் பட்டுக் குஞ்சலங்கள் கட்டித் தமிழ் நாட்டு மணப்பெண்ணாகவே கமலியைத் தோன்றச் செய்திருந்தாள் வசந்தி. நிறமும், இதழ்களின் வெளுத்த ரோஸ் வண்ணமும்தான் வித்தியாசமாகத் தெரிந்தன. மையூட்டியிருந்த காரணத்தால் கமலியின் விழிகளில் கூட அப்போது அதிக வேறுபாடு தெரியவில்லை.
திருமண நாளன்றும், அடுத்த சில நாட்களிலும் குமார், பார்வதி, இருவரும்கூடக் கலியாண வீட்டிலேயே செலவழித்துவிட்டதால், காமாட்சியம்மாள் பெரியம்மாவுடனும், முத்துமீனாட்சிப் பாட்டியுடனும் வீட்டில் தனித்து விடப்பட்டாள். அந்த வீடும் கல்யாணத்துடன் சம்பந்தப்பட்டது என்பதைக் காட்டுவதைப் போல வாசலில் குலை தள்ளிய வாழைமரங்களும், மாவிலைத்