ஆச்சரியத்தை அளித்திருந்தது.
திருமணத்தில் எந்தச் சடங்கும் எந்த மந்திரமும் விட்டுப் போகக் கூடாது என்பதில் கமலி அக்கறை காட்டினாள். சர்மாவும், வேணுமாமாவும் கூட அதைப் புரோகிதரிடம் வற்புறுத்தியிருந்தார்கள். "சீக்கிரமா முடியுங்கோ. நாழியாறது" - என்று உள்ளூர் வைதீகக் குடும்பங்களிலேயே சடங்குகளையும் மந்திரங்களையும் தட்டிக் கழித்துவிட்டு விரைவாக முடித்துக் கொண்டு போக விரும்பும் இந்தக் காலத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு பிரெஞ்சு யுவதி இதில் இத்தனை அக்கறை காட்டுவது புரோகிதருக்கு வியப்பை அளித்தது.
முரண்டும், பொறாமையும் நிறைந்த உள்ளூர் மனிதர்கள் சிலர் தான் வரவில்லையே ஒழியக் கலியாணம் ஜேஜே என்றிருந்தது. கூட்டத்துக்கோ, ஆர்வத்துக்கும் கலகலப்புக்குமோ குறைவில்லை. இறைமுடிமணி மேல் சீமாவையர் போட்டிருந்த பொய் வழக்கு கோர்ட்டில் முடிவாகாமல் இன்னும் இழுபட்டுக் கொண்டிருந்ததனால் - அவர் திருமணத்துக்கு வர முடிந்திருந்தது. நிறையத் தொழிலதிபர்களும், வர்த்தகர்களும், பிரமுகர்களும்கூட வந்திருந்தார்கள்.
"உம்மை சாட்சாத் ஆஞ்சநேயர்னுதான் சொல்லணும் நாயுடு! அநுமார் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்த மாதிரி ராத்திரியோட ராத்திரியா எல்லாச் சாமானையும் கொண்டு வந்து எப்படியோ கல்யாணப் பந்தலைப் பழையபடி போட்டு முடிச்சுட்டீர்..." என்று நாயுடுவைப் பாராட்டினார் வேணுமாமா. பெண்மணிகளின் கூட்டத்தைப் பொறுத்தவரை உள்ளூர் வைதீகக் குடும்பத்துப் பெண்களும் உறவுக்காரர்களின் வீட்டுப் பெண்களும் அதிகம் தென்படவில்லை என்றாலும், சற்றே நாகரிகமடைந்த குடும்பத்துப் பெண்களும், உத்தியோக நிமித்தம் வெளியூர் சென்றிருந்தவர்களும் வேணு மாமா, சர்மா ஆகியோரின் உறவு வகையினருமான பெண்களும் வித்தியாசம் பாராட்டாமல் அந்த திருமணத்துக்கு இயல்பாக வந்திருந்தார்கள்.
பாணிக்ரஹணம், ஸப்தபதி, அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் முதலிய திருமணச் சடங்குகளைப் பற்றி ஏற்கெனவே புத்தகங்களில் படித்தும், ரவியிடம் கேட்டும் அறிந்திருந்த கமலி இப்போது ஒவ்வொன்றையும் தன் சொந்த அனுபவமாகவே இரசித்து மகிழ்ந்தாள். அவற்றை அப்போது அவள் அந்தரங்கமாக விரும்பினாள் என்றே சொல்லலாம்.
"ஏழு அடிகள் என்னோட உடன் நடந்து வந்து விட்ட நீ இனி என் தோழியாகிறாய். நாம்