Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 31 - நா. பார்த்தசாரதி
பொழுது விடிந்தால் முகூர்த்தம். கலியாண வீடு அரவம் அடங்கி உறங்க இரவு இரண்டு மணிவரை ஆயிற்று. இரண்டரை மணிக்குச் சமையற்காரர்கள் கூடத் துண்டை விரித்து அடுப்படியிலேயே தலை சாய்த்து விட்டார்கள்.
நடு இரவு இரண்டே முக்கால் மணி சுமாருக்கு வாசலில் சுமார் ஆயிரம் பேர் வரை உட்காருகிற மாதிரி போட்டு அலங்கரித்திருந்த கல்யாணப் பந்தலில் தீப்பிடித்துவிட்டது. ஒரே கூச்சலும் கூப்பாடுமாகத் தூக்கக் கிறக்கத்தில் இருந்து விழித்து என்ன நடந்திருக்கிறது என்று சுதாரித்துக் கொள்ளவே எல்லோருக்கும் சில விநாடிகள் பிடித்தன. தீயை அணைக்க அந்தக் காற்று வீசிய காலை வேளையில் யாவரும் மிகவும் சிரமப்பட்டனர். காலை எட்டரையிலிருந்து ஒன்பது மணிக்குள் முகூர்த்தம். ஏறக்குறைய முகூர்த்தத்துக்கு மணமேடை போட்டிருந்த இடம் உட்பட எரிந்து சாம்பலாகி விட்டது.
சிறிதும் கலங்காமல் வேணுமாமா சாரங்கபாணி நாயுடுவைக் கூப்பிட்டு, "நீர் என்ன பண்ணுவீரோ தெரியாது நாயுடு! எவனோ கொலைகாரப் பாவி - கிராதகன் இங்கே இந்த அக்கிரமம் பண்ணியிருக்கான். காலம்பர ஆறுமணிக்குள்ளே மறுபடியும் பந்தலை நீர் போட்டாகணும். லட்ச ரூபாய் செலவானாலும் பரவாயில்லே. காரியம் நடக்கட்டும்" - என்று உணர்ச்சி மயமாகி உரிமையோடு நாயுடுவுக்கு உத்தரவு போட்டார்.
"ஆகட்டுங்க...! நானாச்சு" - என்றார் நாயுடு. காலை ஐந்தரை மணிக்குத் தீப்பிடித்த சுவடே தெரியாதபடி, ஜிலுஜிலுவென்று பழைய அலங்காரத்தோடு மறுபடியும் புதுப்பொலிவுடன் விளங்கிற்று அந்த மணப்பந்தல்.
*****
கமலியின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் கொண்டு போய்ப் போட்டுக் காண்பிப்பதற்காக மூவி காமிராவில் மாப்பிள்ளை அழைப்பு முதல் அந்தக் கலியாண நிகழ்ச்சிகள் எல்லாம் ஒன்றுவிடாமல் கலர் பிலிமில் படமாக்கப்பட்டது. அதிகாலையிலிருந்து வைதீகச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. வசந்தி கடைசி முயற்சியாக ஒரு முறை போய்க் காமாட்சியம்மாளை அழைத்துப் பார்க்கலாம் என்று புறப்பட்டுச் சென்று முயன்று பார்த்தாள். ஆனால், காமாட்சியம்மாள் எழுந்து நடமாடக் கூட முடியாத நிலைக்குத் தளர்ந்திருந்தாலும், "மாமீ!