Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 30 - நா. பார்த்தசாரதி
"இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே அதை வளர்ப்பதற்கும், வளர்ப்பதற்குத் துணை செய்கிறவர்களுக்கும் தடையாக இருப்பது போன்ற நிகழ்ச்சிகளைப் பொது வாழ்வில் இங்கே பல சமயங்களில் பார்க்க முடிகிறது. சுயநலமும், பொறாமையும் பிறர் நன்றாக இருக்கப் பொறாத இயல்புமுள்ள தனி மனிதர்களால் ஒரு கூட்டமோ, ஒரு சமூகமோ மட்டுமல்லாமல் ஒரு மதமே கூட வளர்ச்சி தடைபட்டுக் குன்றிப் போக முடியுமோ என்று கூடத் தோன்றுகிறது. கிறிஸ்தவ மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் இருப்பது போல பல நாடுகள், பலவகை மக்கள் என்றில்லாமல் இந்தியாவிலும் அண்டை நாடாகிய நேபாளத்திலும் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதம் உண்மையான பக்தி சிரத்தையோடு தன்னை அணுகி அனுசரிபவர்களுக்கு எல்லாம் தாராளமாகத் தன்னுள் இடமளிப்பதுதான். முறையான திட்டமிடப்பட்ட சமயம் அங்கீகரித்த 'கன்வர்ஷன்' அல்லது 'மாற்றி ஏற்றுக்கொள்ளுதல்' என்பதின்றி அநுசரிப்பவர்களும், சுவீகரித்துக் கொள்ளுபவர்களும் கூட உள்ளே வருமாறு அனுமதிக்கும் பரந்த பண்பு இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் புதியது இல்லை. நீண்ட நாட்களாக வழக்கமான ஒன்றுதான். அன்னி பெஸண்ட் முதல் பலர் இப்படி இந்தியக் கலாசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏராளமான ஐரோப்பியர்கள் இப்படிப் பக்திசிரத்தையோடு இந்து தர்மத்தை அநுசரிப்பவர்களாக மாறி இருந்திருக்கிறார்கள். இதற்குப் பல முன் மாதிரிகள் காட்டலாம் (சில முன்மாதிரிகள் நீதிபதியால் விவரிக்கப்பட்டன). இங்கே இந்த வழக்கின் சாட்சியங்களைக் கொண்டு கவனிக்கும் போது குற்றம் என்பதாகச் சாட்டியிருப்பவற்றுக்கு நிரூபணமில்லாததோடு அவை வேண்டுமென்றே வலிந்து தயாரிக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றன. கமலி என்ற பிரெஞ்சுப் பெண்மணி இந்துவாகவே தோன்றி வாழ்ந்து வருவதற்கான ஆதாரங்கள் நியாயமாகவும் செம்மையாகவும் உள்ளதுடன் சத்திய பூர்வமாகவும் தென்படுகின்றன. அவள் நுழைந்ததனால் ஆலயங்கள் பரிசுத்தம் கெட்டுவிட்டன என்று ஆட்சேபிப்பவர்களின் பரிசுத்தம் தான் இங்கே சந்தேகத்துக்கு இடமானதாகத் தெரிகிறது.
சொல்லப்போனால் சாட்சியங்களிலிருந்தும், விவரங்களிலிருந்தும் உள்ளூர் இந்துக்களை விட அதிக பக்தி சிரத்தையுடனும், முறையுடனும், தூய்மையுடனும் அவள் இந்துக் கோவில்களில் சென்று வழிபட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆகவே கோவில்களில் எந்தப் பரிசுத்தமும் எந்தப் புனிதத் தன்மையும் இதனால் கெட்டுவிடவில்லை. இக் காரணங்களால் இவ் வழக்கை நான் தள்ளுபடி செய்கிறேன்" - என்று தீர்ப்பு வாசித்து முடிக்கப்பட்டது. தீர்ப்பில் பிரதிவாதிகளாகிய