இதென்ன பைத்தியக்காரத்தனம்? இண்டியன் மேரேஷ் ஷுட் பி ஆன் இண்டியன் மேரேஜ்" - என்று சொல்லி ரவி சூட் அணிய மறுத்துவிட்டான். அவன் இப்படிக் கூறியதைக் கேட்டு சர்மாவுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. வெளிநாட்டில் வேலைபார்க்கும் படித்த மாப்பிள்ளை பட்டு வேஷ்டி அங்கவஸ்திரத்தோடு ஜானவாஸத்துக்கு வந்ததை ஊரே பெரிய ஆச்சரியத்தோடு பார்த்தது.
மாப்பிள்ளை அழைப்பைப் பார்க்கவும், புகழ்பெற்ற இரட்டையர்களின் நாதஸ்வர இன்னிசையைக் கேட்கவும் ஊரே வழித்துணை விநாயகர் கோவிலைச் சுற்றியும், வீதிகளிலும் கூடிவிட்டது. சங்கரமங்கலத்தையே திருவிழாக் கோலங்கொள்ளச் செய்திருந்தது அந்தத் திருமணம். கோர்ட், கேஸ் என்று வேறு நடந்து விளம்பரமாகி இருந்ததனால் அந்தத் திருமணத்தைப் பற்றிய செய்தி உள்ளூரிலும் அக்கம் பக்கத்து ஊர்களிலும் அதிகப் பரபரப்பை உண்டாக்கியிருந்தது.
கையில் ரிஸ்ட் வாட்ச், கழுத்தில் தங்கச் சங்கிலியோடு இளம் வயதினரான ஒரு நகர்ப்புறத்துப் புரோகிதர் தமது உதவியாளரோடு வந்து வைதிகச் சடங்குகளை நடத்தி வைத்தார். கமலியை அசல் கிராமாந்தரத்து அழகியை எவ்வாறு அலங்கரிப்பார்களோ அப்படி மணப்பெண்ணாக அலங்கரித்திருந்தாள் வசந்தி. கைகளிலும் பாதங்களிலும் முதல் நாள் மருதாணி அரைத்து இட்டுக் கொண்டதன் விளைவாகச் சிவப்புப் பற்றி அவளுடைய நிறத்துக்கு அந்தச் சிவப்பு மிகவும் அழகாக எடுத்துக் காட்டியது. அலங்காரம் முடிந்ததும் வசந்தி தன் கண்களே திருஷ்டி பட்டு விடுமோவென்று கமலிக்குத் தானே கண்ணேறு கழித்தாள்.
வேணு மாமாவின் ஏற்பாடு எல்லாமே பிரமாதமாயிருந்தன. ரவி-கமலி திருமணத்தை ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டு பிரமாதமாக நடத்திக் கொண்டிருந்தார் அவர். உள்ளூரில் அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களையும் சேர்ந்தவர்கள் ஒரு சிலரைத் தவிர அநேகர் இந்தக் கலியாணத்தை ஏதோ ஒரு வேடிக்கை போலப் பார்த்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களிற் சிலர் இந்தக் கல்யாணத்தைக் கேலி பண்ணினார்கள். வேறு சிலர் ஒதுங்கி நின்று புறம் பேசினார்கள். வழித்துணை விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை காரில் ஊர்வலம் புறப்பட்ட அதே நேரம் சீமாவையர் வீட்டுத் திண்ணணயில் வம்பர் சபை கூடியிருந்தது. ஆனால் சபையின் ஆட்கள் சுரத்தில்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
"என்ன ஓய் ஹரிஹரையர்! மாப்பிள்ளை அழைப்புக்கு நீர் போகலியா? ஜானவாஸ விருந்து