பிரமாதமா ஏற்பாடு பண்ணியிருக்காளாம். மாட்டுப் பொண் பிரெஞ்சுக்காரியோ இல்லியோ, அதுனாலே ஆட்டுக்கால் சூப், மீன் குழம்பு, மட்டன் பிரியாணீன்னு..." என்று வேண்டுமென்றே சீமாவையர் வம்பைத் தொடங்கினார்.
சமையல் சங்கரையர் தான் கல்யாணத்தில் நளபாகப் பொறுப்பேற்றிருக்கிறார். முழுக்க முழுக்க சைவச் சமையல்தான், எல்லாம் வைதீக சம்பிரதாயப்படிதான் நடக்கிறது என்பதெல்லாம் சீமாவையருக்கு முழுமையாகத் தெரிந்திருந்தும் எப்படியாவது விசுவேசுவர சர்மாவின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற முரண்டு தான் இப்படி எல்லாம் அவரைத் தாறுமாறாகப் பேச வைத்திருந்தது. ஆனால் ஹரிஹர ஐயர் விடவில்லை.
"என்னை யார் ஓய் கூப்பிடக் காத்துண்டிருக்கா. நீர் தான் முந்தின ஸ்ரீமடம் ஏஜெண்ட். இப்போ உம்ம ஸ்க்ஸஸராத்தான் சர்மாவே ஏஜெண்டா இருக்கார். உம்மையே அழைக்கல்லேன்னா என்னை யார் அழைக்கப் போறா?" - என்று சீமாவையரைப் பதிலுக்குக் கேட்டார்.
"என்னைச் சர்மா அழைக்கல்லேன்னு உமக்கு யார் சொன்னா? என் பேருக்குப் பத்திரிகை அனுப்பிச்சிருக்கார். நான் தான் போகலை. கண்ட தறுதலைக் கல்யாணத்துக்கெல்லாம் போறது எனக்குப் பிடிக்கல்லே" - என்று அத்தனை வெறுப்புக்கிடையேயும் ஜம்பமாகப் பேசினார் சீமாவையர். உள்ளூறத் தாங்க முடியாத எரிச்சல் அவருக்கு. சர்மாவை அப்படியே கடித்துத் துப்பிவிட வேண்டும்போல அவர் மேல் அத்தனை கோபம் வந்தது சீமாவையருக்கு. கேஸ் வேறு தள்ளுபடி ஆகிவிட்டதால் அந்த எரிச்சலும் கோபமும் முன்பிருந்ததை விட இரண்டு மடங்கு ஆகி இருந்தன. எப்படியாவது சர்மாவை தலையெடுக்க விடாமல் பண்ணி அவமானப்படுத்தி விட வேண்டுமென்று சீமாவையரின் உள்மனம் கறுவிக் கொண்டிருந்தது.
"நாம் தான் இங்கே வேலையத்துப் போய் உட்கார்ந்திண்டு இருக்கோம். ஊரே அங்கே மாப்பிள்ளை அழைப்பிலேதான் கூடியிருக்கு. வாண வேடிக்கைக்கு மட்டும் சிவகாசிக்காராளுக்குப் பத்தாயிர ரூபாய்க்குக் காண்ட்ராக்ட்டாம்; நாதஸ்வரத்துக்கு ஐயாயிரமாம்! அந்த வேணு கோபாலையர் பணத்தைத் தண்ணியாச் செலவழிக்கிறாராம். சர்மாவோட புள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கப்போற அந்தப் பிரெஞ்சுக்காரியே அவள் அப்பாகிட்டே சொல்லிக் கையோட இதுக்குன்னே நிறையப் பணம் வேற கொண்டு வந்திருக்காளாம். எல்லாம் ஜாம் ஜாம்னு நடக்கறது. நீரும் நானும் வரலேன்னு அங்கே யார் ஓய் கவலைப்படறா? பெரிய பெரிய கோட்டீஸ்வர வியாபாரியெல்லாம் வேணு கோபாலய்யருடைய சிநேகிதன்கிற