இதிலே எல்லாம் வீணாத் தலையிடாதியும். ஊர்லே யார் யாரோட கல்யாணம் பண்ணிண்டா உமக்கென்ன வந்தது?" - என்று சீமாவையரிடம் கறாராக மறுத்துச் சொல்லிவிட்டார் சமையற்காரர். சீமாவையரால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
புரோகிதர் ஜம்புநாத சாஸ்திரி பயந்து போய்க் காசியாத்திரை புறப்பட்டதைச் சர்மாவிடம் கேள்விப்பட்ட இறைமுடிமணி, "இந்த மாதிரிப் புரோகிதங்களை நம்பாதீங்க. பதிவுத் திருமணமோ, சீர்திருத்தத் திருமணமோ பண்ணிக்குங்கன்னு எங்க இயக்கம் ரொம்ப நாளாச் சொல்லிட்டு வாரதே இதுக்காவத்தான்" - என்று சொல்லிச் சிரித்தார். சர்மாவும் பதிலுக்கு விடவில்லை. கேட்டார்: "இப்போ அதிலே மட்டும் என்ன வாழுதாம்? தலைவர், வாழ்த்துரை வழங்குவோர்னு ஒரு புரோகிதருக்குப் பதில் ஒன்பது புரோகிதன் வந்தாச்சே? எந்தக் கட்சி சர்க்காரோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவா கல்யாணம்னா மந்திரியே புரோகிதரா வந்து எல்லாம் பண்ணி வச்சுடறார்."
"அட நல்ல ஆளுப்பா நீ! நீயும் உன் முரண்டிலேருந்து மாறப் போறதில்லை. நானும் என் முரண்டிலேருந்து மாறப் போறதில்லே. விட்டுத் தள்ளு" - என்றார் இறைமுடிமணி. கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகள் அவர்களுக்கு வந்தாலும் அவை கண்ணியமான முறையில் இருந்தன. நட்பைப் பாதிக்கவில்லை. இவர் அவரைக் கேலி பண்ணுவது போல் பேசுவதும் அவர் இவரைக் கேலி பண்ணுவதுபோல் பேசுவதும் சகஜமாயிருந்தாலும் இருவரும் தங்களுக்குள் ஒரு போதும் எல்லை கடந்து போனது கிடையாது. கலியாணத்துக்கு முதல் நாள் மாலை வழித்துணை விநாயகர் கோவிலிலிருந்து அவ்வூர் வழக்கப்படி மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. பிரசித்தி பெற்ற வாத்தியக் கோஷ்டியின் இரட்டைத் தவில் நாதஸ்வரக் கச்சேரி என்பதால் ஊரே அங்கு திரண்டு விட்டது.
"மாப்பிள்ளை அழைப்புக்குப் புது சூட், ஷூ எல்லாம் ரெடி!" - என்று வசந்தி வந்து ரவியிடம் சொன்னபோது,
"வர வர பிராமணக் குடும்பங்களில் கல்யாணம்கிறதே ஒரு 'ஃபேன்ஸி டிரஸ் காம்பெடிஷன்' மாதிரி ஆயிண்டு வரது! இது எப்படி நம்ம கலியாணத்திலே நுழைஞ்சுதுன்னே புரியலே. அழகா லட்சணமா வேஷ்டி அங்கவஸ்திரம் போட்டுண்டு மாப்பிள்ளை அழைப்புக்கு வந்தா என்ன கொறஞ்சுடப் போறது? இதெல்லாம் வேண்டாம். எடுத்துண்டு போ. மாப்பிள்ளைக்கு சூட் கோட்டுன்னாக் கலியாணப் பொண்ணுக்கும் 'ஸ்கர்ட்' போட்டுக் கொண்டு வந்து நிறுத்தலாமே?