"உண்மைதான். மற்றவர்களைக் கெடுத்துத் தான் வாழவேண்டும் என்பதுதான் கெட்ட தன்னலம். மற்றவர்களும் வாழத் தானும் வாழவேண்டும் என்பது நல்ல தன்னலம். தனக்கு மட்டும் நல்ல காலம் வரவேண்டும் என்பது கெட்டது. நாட்டுக்கே நல்ல காலம் வந்தால், தனக்கும் நல்ல காலம் வரும் என்பது நல்லது. அதனால் மூடநம்பிக்கைகளை நான் வெறுக்கிறேன். அவைகள் அறிவுக்கும் பொருந்தவில்லை; தன்னலத்தையும் வளர்க்கின்றன."
மாலன் பேசாமல் இருந்தான். மறுபடியும் குறிப்புப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபடி இருந்து எழுந்து சென்றான்.
சந்திரன் ஒரு வகையில் கெட்டான்; மாலன் மற்றொரு வகையில் குறுக்கு வழிகள் நாடித் தவறான பாதையில் போவதால் கெடுவானோ என்று அவனைப் பற்றியும் அன்று கவலைப்பட்டேன். சூரியனை உலகம் சுற்றுவது முதல் அணுக்களின் சுழற்சிவரையில் பல துறையிலும் விஞ்ஞான அறிவு பெற்று வளரும் கல்லூரி மாணவர்களின் மனப்பான்மையே இப்படி இருந்தால், உலகம் எப்படி முன்னேற முடியும் என்று எண்ணிச் சோர்ந்தேன்.
இமாவதியிடமிருந்து ஏதாவது கடிதம் வருமா என்று நாள்தோறும் எதிர்பார்த்து வந்தேன். ஒரு நாள் எதிர்பார்த்தபடியே கடிதம் வந்தது. தான் ஊருக்கு வந்திருப்பதாகவும் பேச விரும்புவதாகவும் குறிப்பிட்டு வீட்டுக்கு வருமாறு அழைத்திருந்தாள். மறுநாள் சனிக்கிழமையாக இருந்தது. மாலனிடம் உண்மையைச் சொல்லிவிட்டு இராயப்பேட்டைக்குச் சென்றேன்.
அவள் என்னை எதிர்பார்த்திருந்தாள். கதவைத் தட்டியவுடன் திறந்து பார்த்து, "வாங்க வருவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்" என்று வரவேற்றாள்.
முந்திய ஆண்டில் தேர்வுக்கு முன் அவளைக் கண்ட பிறகு இப்போது ஐந்து மாதம் கழித்துக் கண்டேன். முன்னைவிட அவளுடைய முகத்தின் பொலிவும் மினுமினுப்பும் மிகுதியாக இருந்தன. ஆனால் முன் இருந்த துடிதுடிப்புச் சிறிது குறைந்தாற்போல் தோன்றியது. தோற்றம் முன்னைவிட எளிமையாக இருந்ததை உணர்ந்தேன். சிறு நீலநிற வாயில் சேலையும் அதே துணியில் தைத்த சோளியும் அணிந்து எளிமையாகத் தோன்றினாள். அந்த எளிமை