உறங்காமல் இருக்கிறாய் என்று கேட்டார். ஏதோ துன்பமான கனவு கண்டதாகச் சொல்லிவிட்டேன்."
"என்ன கனவு என்று அவர் கேட்கவில்லையா?"
"பகலெல்லாம் ஓயாமல் வேலை செய்கிறவர். படுத்தால் நன்றாக உறங்குவார். இப்படி எல்லாம் கேட்டுப் பழக நேரம் ஏது? ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் ஓய்வு. அன்றைக்கும் எத்தனையோ நண்பர்கள், உறவினர்கள். அதன் பிறகும் அவர் என்னைக் கேட்கவில்லை. மறந்து விட்டார். கேட்டிருந்தாலும் உண்மையைச் சொல்லிப் பயன் இல்லை; சொல்லியிருக்க மாட்டேன்."
"ஏன் அப்படி?"
"அது உங்களுக்கு ஏன் தெரியவேண்டும்? எங்கள் கல்லூரியின் உள நூல் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தது அது. ஆண்கள் எவ்வளவுதான் முற்போக்காக இருந்தாலும் சந்தேகப்படுவார்கள். ஆகையால் அவர்களின் எதிரில் அண்ணன் தம்பியுடனும் எந்த ஆணுடனும் நெருங்கிப் பழகக் கூடாது. பழைய பழக்கங்களையும் சொல்லக்கூடாது என்று அறிவுரை கூறியிருக்கிறார்."
எனக்குச் சிரிப்பு வந்தது.
"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.
"பெண்கள் மட்டும் சந்தேகம் இல்லாதவர்களா? தன் கணவர் இன்னொரு பெண்ணுடன் வேறு எந்தக் காரணத்திற்காகப் பழகினாலும் மனைவிக்குச் சந்தேகம் ஏற்படாதா?" என்றேன்.
"அதுவும் உண்மைதான்" என்று அவளும் சிரித்தாள்.
"உங்கள் உளநூல் ஆசிரியை திருமணம் ஆனவரா?"
"ஆமாம். திருமணம் ஆகிக் கணவரோடு வாழாதவர்; கணவனால் கைவிடப்பட்டவர்."