"பெயர் நினைவுக்கு வரவில்லை. சந்திரன் சொன்னது நன்றாக நினைவுக்கு வருகிறது. உங்களைச் சின்ன வயதிலிருந்து அன்பாக எடுத்து வளர்த்தவளாம். விதவையாம்."
"ஆமாம். பாக்கிய அம்மையார். மூன்றாம் வீடு"
"அந்த அம்மாவைப் பற்றித்தான் ஒருநாள் என்னிடம் பேசினார். கடற்கரையில் நானும் அவரும் மட்டும் உட்கார்ந்திருந்தபோது பேசினார். அந்தப் பேச்சு ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது."
"நல்ல உத்தமியாயிற்றே. என்ன சொன்னான்?"
"பெண்களின் மனத்தையே அளந்து காண முடியாது என்றார். நம்ப முடியாது என்றார். அப்படிச் சொல்லக் காரணம் என்ன என்று கேட்டேன். அப்போதுதான் அந்த அம்மாவைப் பற்றிச் சொன்னார். நல்ல அழகும் அறிவும் உள்ளவளாம். இளமையிலேயே கணவனை இழந்தவளாம். சந்திரனோடு அன்பாகப் பழகினாராம். அவரும் அவளோடு தாயோடு பழகுவது போல் பழகினாளாம். கடைசியில் மனத்தில் வேறு ஆசை தோன்றியதாக அறிந்து கொண்டாராம். உடனே அங்கே போகாமல் விலகிவிட்டாராம். பழக்கத்தையே குறைத்துக் கொண்டாராம்."
அதைக் கேட்டதும் எனக்குத் திடுக்கிட்டது என் உள்ளத்திற்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பெருமூச்சு விட்டேன். ஒன்றும் பேச வாய் வரவில்லை.
"நான் இதை உங்களிடம் சொல்லியிருக்கக் கூடாது. தவறு செய்துவிட்டேன் உங்கள் மனம் வருந்துவது தெரிகிறது" என்றாள் இமாவதி.
"எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. அந்த அம்மா எனக்கு உறவு அல்ல. ஆனால் மிகமிக வேண்டியவர். குழந்தையாக இருந்தபோது முதல் என்னிடம் அன்பு காட்டியவர். ஆனால், அவன் சொன்னது நம்ப முடியாதது. பொய். வேறு ஏதாவது சொன்னானா?"
"வேறு ஒன்றும் சொல்லவில்லை."
"அதைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?"