"எனக்கு எப்படி உண்மை தெரியும்? அதைக் கேட்ட பிறகு, சந்திரன் செய்தது சரி. அப்படி விலகுவதுதான் நல்லது என்று தோன்றியது. அவர் செய்தது சரி என்று அவரிடமே சொன்னேன். என் மனத்துக்குள் அவருடைய பண்பைப் பாராட்டினேன். ஆண்கள் இப்படித்தான் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன்."
அதை மறுத்திட வேண்டும் என்று என் மனம் தூண்டியது. "சந்திரன் சொன்னதை நம்ப வேண்டா. உங்களிடம் பழகியபோதுதான் தவறாக எண்ணினான் என்றும், இதுதான் முதல் தவறு என்றும் இதுவரையில் கருதி வந்தேன். இது இரண்டாவது தவறு. இதற்கு முன்னமே பாக்கியம் அம்மையாரின் அன்பையும் அவன் இப்படியே தவறாக எண்ணிவிட்டான். அப்போதே முதல் தவறு செய்தான் என்று இப்போது தெரிந்து கொண்டேன். அவனுடைய மனத்திலேயே ஒருவகைக் கோளாறு இருக்கிறது. அதனால் தான் தாய் போல் பழகினாலும் தவறாக எண்ணுகிறான். தங்கை போல் பழகினாலும் தவறாக எண்ணுகிறான்" என்று சிறிது கடுமை கலந்த குரலில் சொன்னேன்.
"என்ன இப்படிக் கடுமையாகப் பேசுகிறீர்களே!" என்று திகைப்போடு பார்த்தாள் இமாவதி.
"ஆமாம். பெண்களின் மனத்தை அளந்து காண முடியாது என்றான். பொதுவாக, நல்ல மனத்தையே காண முடியாதவன் அவன். அதனால்தான் அப்படித் தடுமாறினான்" என்றேன்.
"சந்திரனை அவ்வளவு அறிவில்லாதவராகவோ கெட்டவராகவோ என்னால் கருதமுடியாது. நீங்கள் ஏனோ இப்படி எண்ணுகிறீர்கள்" என்றாள்.
என் கடுமையும் வேகமும் மெல்லத் தணிந்தன. பாக்கிய அம்மையாரின் வாழ்க்கையைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் சொன்னேன். பிறகு வேறு பேச்சும் பேசிவிட்டு விடைபெற்றேன். விடைபெறு முன்பு "பொதுவாகப் பார்த்தால், சந்திரன் எதையும் அவசரப்பட்டு முடிவு செய்து விட்டு பிறகு அந்த முடிவுகளால் அல்லல் படுகிறான் என்று தெரிகிறது" என்று என் கருத்தைச் சொல்லிவிட்டு வந்தேன்.
திரும்பி வந்தபோது, மாலன் விரிவாகக் கேட்பான் என்று எதிர்பார்த்தேன். "பழைய கதையைப்