(Reading time: 19 - 38 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

"அப்படியானால் ஏன் யாருக்கும் கடிதம் எழுதவில்லை"

  

"அவனுடைய இயற்கை அது. வாலாசாவில் இருந்தபோது என்னோடு எவ்வளவு நெருங்கிப் பழகினான் தெரியுமா? இரவும் பகலும் பிரியாமல் பழகினோம். அப்படிப்பட்டவன், சென்னைக்கு வந்த பிறகு சரியாகப் பழகவே இல்லையே. மனத்தில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டால், உடனே பழக்கத்தையே மாற்றிக்கொண்டு வேறு ஆள் போல் மாறிவிடுகிறான். இப்போதும் அப்படித்தான் செய்தான். பொறுத்துப் பார்ப்போம். இனிமேலாவது ஒரு கடிதம் எழுதுவான் என்று நம்புகிறேன்."

  

"அப்படியானால் அவர் உயிரோடு இருப்பார் என்றே சொல்கிறீர்கள்" என்று மறுபடியும் கவலையோடு கேட்டாள்.

  

"அப்படிச் சந்தேகமாக எண்ணவே வேண்டா. "ஏன் சந்தேகப்பட வேண்டும்?" என்றேன். அதன் பிறகு அமைதியாக இருந்தாள். பேச்சை மாற்றுவதற்காக அவளுடைய கணவரின் தொழில், வாழ்க்கை, வருவாய் முதலியன பற்றிக் கேட்டேன். அக்கறை இல்லாதவள் போல் அவற்றிற்கு மறுமொழி அளித்தாள்.

  

பிறகு மறுபடியும் சந்திரனைப் பற்றிய பேச்சைத் தொடர்ந்து, "நான் அவரோடு பழகியது தவறு என்றோ அவரை ஏமாற்றிவிட்டேன் என்றோ நீங்கள் கருதுகிறீர்களா?" என்று கேட்டாள்.

  

"ஏன் அதைப் பற்றித் திரும்பத் திரும்ப எண்ணிக் கலங்குகிறீர்கள். நான் அன்றைக்கே சொன்னேனே. நீங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. அவன் அவனுடைய அறியாமையால் அப்படி எண்ணி விட்டான் என்று சொன்னேனே. இனிமேல் அதைப்பற்றி எண்ணவே வேண்டா. விட்டு விடுங்கள்" என்றேன்.

  

பிறகு இமாவதியின் தாய் வந்து சிறிது நேரம் பேசிவிட்டு எழுந்து சென்றார். அவர் தம்முடைய பேச்சுக்கு இடையே, "இந்தக் காலத்துப் பிள்ளைகளே இப்படித்தான். ஒன்றும் இல்லாமலே காதல் காதல் என்று எண்ணிக் கொண்டு வீணாக மயங்கிப் போகிறார்கள்" என்றார். எனக்கு அந்தச் சொல் ஒரு புதுக் குண்டு போல் இருந்தது. அவர் போனபிறகு, சந்திரனுடைய பண்பைப் பற்றி இமாவதி என்ன எண்ணுகிறாள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.