காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருந்தது. காதில் பழைய தோடும், கழுத்தில் ஒரு மெல்லிய சங்கிலியும் அணிந்திருந்தாள். கையில் இரண்டு இரண்டு பொன் வளையல்கள் இருந்தன. கைக்கடியாரம் இல்லை. திருமணமாகி இல்வாழ்க்கை தொடங்கிய பிறகு சில பெண்களுக்கு ஆடம்பர வேட்கை குறைகிறது என்றும், சிலருக்குக் குழந்தைகள் பிறந்த பிறகே ஆடம்பர வேட்கை குறைகிறது என்றும், இன்னும் சிலருக்குத் தம் வயிற்றில் பிறந்த பெண்ணுக்குத் திருமணம் ஆனபிறகே ஆடம்பரம் குறைகிறது என்றும், வேறு சிலருக்குச் சாகும்வரையில் அந்த வேட்கை தீர்வதில்லை என்றும் ஒரு நூலில் படித்தது நினைவுக்கு வந்தது. இமாவதி முதல் வகுப்புப் பெண் என்று உணர்ந்து மகிழ்ந்தேன். ஆடம்பரம் குறைந்தும் அவளுடைய அழகு குறையவில்லை. நெற்றியில் சிறு திலகத்துடன் வாயில் புன்முறுவலுடன் அவள் என் எதிரே உட்கார்ந்தபோது அழகிய ஓவியம் போலவே விளங்கினாள்.
பேச உட்கார்ந்தவுடன், "அவரைப் பற்றி இன்னும் ஒன்றும் தெரியவில்லையா!" என்று கேட்டாள். அவள் முகத்தில் கவலை இருந்தது. "இன்னும் ஒன்றும் தெரியவில்லை. உங்களுக்காவது ஏதாவது கடிதம் வந்திருக்கும் என்று எண்ணினேன். உங்களுக்கும் ஒன்றும் எழுதவில்லையே" என்றேன்.
"அவரைப் பற்றிய நினைவு அடிக்கடி வருகிறது. பழகாமலே இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருடைய பிரிவுக்கும் துன்பத்துக்கும் நான் காரணமாக இருந்தேன் என்பதை நினைத்துக்கொள்ளும் போதெல்லாம் என் மனம் வேதனைப்படுகிறது. என்ன செய்வது?" என்று முகம் கவிழ்ந்தாள்.
அவளுடைய உள்ளத்திலும் இன்னும் அந்தப் பழைய கலக்கம் இருந்து வருதலை உணர்ந்தேன். "இனிமேல் நாம் கவலைப்பட்டுப் பயன் என்ன? மெல்ல மெல்ல மறக்க வேண்டியதுதான்" என்றேன்.
"ஒருநாள் கனவில் வந்தார். இதே வீட்டில்தான். அந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்திருந்தார். தலைகுனிந்தபடி இருந்தார். நான் வந்து பார்த்துக் கேட்டேன். வாய் திறக்காமல் தலைகுனிந்தபடி இருந்தார். இப்படிச் சொல்லாமல் எங்கே போனீர்கள் என்று கேட்டேன். ஓ என்று அலறினார். உடனே விழித்துக் கொண்டேன். அதன் பிறகு அன்று இரவெல்லாம் எனக்கு உறக்கம் வரவில்லை. சிறிது நேரம் அழுதேன். என் கணவர் விழித்துப் பார்த்து, ஏன் இன்னும்