"சந்திரனுடைய மனத்தைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்? அவன் காதலைப் பற்றி ஏதாவது சொன்னது உண்டா?" என்றேன்.
"என்னிடத்தில் அப்படி அவர் ஒரு நாளும் சொன்னதே இல்லை. சொல்லியிருந்தால் ஒன்று நானாவது விலகியிருப்பேன். அல்லது, இந்தத் திருமணமாவது நடந்திருக்காது. அப்படி ஒன்றும் சொன்னதே இல்லை" என்றாள்.
"மற்றப் பெண்களைப் பற்றியாவது அவன் உங்களிடத்தில் ஏதாவது சொன்னது உண்டா?"
"அவர் இந்தப் பேச்சையே பேசுவதில்லை. பாடங்களைப் பற்றிப் பேசுவார். பொது அறிவு பேசுவார். அரசியல் பேசுவார். சமயம் பற்றிப் பேசுவார். குடும்பத்தாரைப் பற்றிப் பேசுவார். ஆனால் பெண்களைப் பற்றியோ, காதலர்களின் போக்கைப் பற்றியோ பேசுவதில்லை. ஆனால்..." என்று சிறிது நிறுத்தினாள்.
"ஏன் தயங்குகிறீர்கள்? சொல்லக் கூடாதா?"
"அப்படி ஒன்றும் இல்லை. உங்களுக்கு அதனால் ஏதாவது வருத்தம் ஏற்படுமோ என்றுதான் தயங்குகிறேன்."
"என்னைப்பற்றி ஏதாவது சொன்னானா?"
"இல்லை. உங்களுக்கு வேண்டியவரான ஓர் அம்மாவைப் பற்றி."
"இருந்தால் என்ன? சொல்லுங்கள். அப்படி யாரும் இல்லையே"
"உங்கள் ஊரில், உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்."
சிறிது நேரம் எண்ணிப் பார்த்தேன். யாரும் நினைவுக்கு வரவில்லை. "பெயர்?" என்றேன்.