"சரிதான். தம் சொந்த அனுபவம் போலும்."
"அய்யோ! தூய்மையான நல்ல வாழ்க்கை. ஒன்றும் குறை சொல்ல முடியாது."
"இருக்கலாம்."
சிறிது நேரம் இருவரும் பேசாமல் இருந்தோம்.
"உயிரோடு இருக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அப்படி இருந்தால் யாருக்காவது ஒரு கடிதம் எழுதியிருக்க மாட்டாரா?" என்று மறுபடியும் அவளே அந்தப் பேச்சைத் தொடங்கினாள்.
"ஏன் அப்படிச் சந்தேகப்படுகிறீர்கள்?"
"செத்தவர்கள் கனவில் வருவதாகச் சொல்வார்கள். அன்று இரவு அவர் கனவில் வந்தபோது, அவர் இறந்து போயிருப்பார் என்று எண்ணினேன். அதனால்தான் துயரம் தாங்காமல் அப்படி அழுதேன்."
"உயிரோடு இருப்பவர்கள் கனவில் வருவதில்லையா?"
"வருகிறார்கள். உண்மைதான். ஆனால் துயரப்படும் போது இந்த ஆராய்ச்சி எல்லாம் நினைவுக்கு வருவதில்லை; மனம் மெலிவாக இருக்கும்போது, அறிவு துணைக்கு வருவதே இல்லை அல்லவா? அதுபோகட்டும். அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"
"நல்லவன் என்றுதான் நினைக்கின்றேன். கொஞ்சம் மன உறுதி இருந்திருந்தால் இப்படிப் போயிருக்க மாட்டான்."
"உயிரோடு இருப்பார் என்றே எண்ணுறீர்களா?"
"ஆமாம்."