(Reading time: 47 - 94 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

"நீ ஒன்றும் கேட்கவில்லையே. எதைப் பேசினாலும் உடனே விம்மி விம்மி அழுகிறாய். அதனால் உடம்பும் கெட்டுப்போகிறது" என்றேன்.

  

"அழுவது ஒன்றுதான் இப்போது என் மனத்துக்கு மருந்தாக இருக்கிறது. உண்மையாய்ச் சொல்கிறேன் வேலு அழுத பிறகுதான் மனம் அமைதியாக இருக்கிறது. அழுவது நல்லது, மிக மிக நல்லது வேலு" என்றான்.

  

"ஊரில் எல்லாரும் நல்லபடி இருக்கிறார்கள். அப்பா இருக்கிறார். தங்கை கற்பகம் இருக்கிறாள்" என்றேன்.

  

"ஏன்? இன்னும் மைத்துனன் வந்து அழைத்துப் போகாமலே இருக்கிறானா?"

  

"இல்லை, இப்போது அன்பாக இருக்கிறார்கள். மாலன் முன் போல் இல்லை. மனம் திருந்திவிட்டான்."

  

"அப்பா! நல்ல செய்தி சொன்னாய் அப்பா. என் வயிற்றிலே பால் வார்த்தாற் போல் இருக்கிறது. நல்லபடி இருக்கட்டும்; போ. கற்பகத்தின் வாழ்க்கையும் கெட்டுப் போகுமே என்று பயந்தேன். ஆசுபத்திரியில் இருந்தபோது அவளைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டேன். நல்லபடி வாழணும்" என்றான்.

  

காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு மிக அமைதியாகப் பேசினான். பழைய சந்திரனுடைய அறிவின் தெளிவை அந்தப் பேச்சில் கண்டேன்.

  

"வேலு! எனக்கு ஒன்று தோன்றுகிறது. எனக்கு இளமையிலேயே காம உணர்ச்சி மிகுதியாக இருந்தது. என்னைப்போல் எத்தனையோ பிள்ளைகள் இருப்பார்கள் அல்லவா?" என்றான்.

  

"ஆமாம். உடல்நூல் அறிஞர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அறிவின் ஆற்றல் மிகுதியாக உள்ளவர்களுக்கு இந்த உணர்ச்சியும் மிகுதியாம். உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு போனால் அவர்கள் சிறந்த அறிஞராக விளங்குவார்களாம்" என்றேன்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.