"அது சரி. அப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெண்ணின் அன்பு இல்லாமல் பட்டினி போட்டால் கெட்டுப் போவார்களே, நான் அப்படித்தான் கெட்டொழிந்தேன். பழங்காலத்தில் போல பதினெட்டு இருபது வயதில் திருமணம் முடித்துவிட்டால்-"
"படிப்புக்கு இடையூறாகப் போய்விடும். வளர வேண்டிய திறமை வளராமலே போய்விடுமே. அது பெரிய இழப்பு அல்லவா?"
"அதுவும் உண்மைதான்" என்று தெளிவாகச் சொல்ல முடியாமல் அவனுடைய தொண்டை கரகரத்தது. கனைத்தான். உடனே இருமல் வந்தது. மார்பைத் தடவிக் கொண்டான். பிறகு தொண்டையை ஒருவாறு சரிப்படுத்திக் கொண்டு, "பெண்களின் அன்பைப் பெற முடியாமல் தடுக்கும்போது, அவர்களின் அழகும் கண்ணில் படாதவாறு தடுக்கவேண்டும். அதை செய்யாமல்-" என்று சொல்லி நிறுத்தினான். பிறகு "சிலர் முகமூடி போட்டு மறைப்பதும் இதற்குத்தானோ, என்னவோ? துறவியாகும் பெண்களையும் விதவைகளையும் மொட்டை யடிக்கும் வழக்கமும் உலகத்தில் இருக்கிறது. ஆமாம், பெண்ணின் அழகு பொல்லாதது. கெடுத்துவிடும் என்று பயந்து தான் செய்திருப்பார்கள்."
"இருந்தாலும் நாகரிகம் அல்ல."
"அது சரி. ஒப்புக் கொள்கிறேன். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் முடியுமா? என் பழைய வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. கல்லூரியில் படிக்கும்போது அந்தப் பெண்ணின் அன்பு கிடைத்தவரையில் கெடாமல் இருந்தேன். நீலகிரியில் அந்தத் தேயிலைத் தோட்டத்திலும் ஒருத்தியின் அன்பு கிடைத்தது. ஒழுங்காகத்தான் இருந்தேன். அவள் முரட்டுப் பெண். முரட்டுப் பெண்ணாக இருந்தாலும், அன்பில் முரட்டுத் தன்மை ஏது? எங்கள் ஊர்தான் என்னைக் கெடுத்துவிட்டது."
இவ்வாறு அவன் சொன்னபோது, ஊர் அல்ல. ஊரில் இருந்த செல்வம், அதிகாரச் செருக்கு, காசுதான் காரணம் என்று அப்போது எனக்குள் எண்ணிக் கொண்டேன்.
"அவர்கள் நானாகத் தேடிப்போன பெண்கள். என் மனைவி அப்படி நான் தேடியவள் அல்ல. அவள் வரும் போதே பயந்து வந்தாள். நான் அவளிடம் அன்பைப் பெறவில்லை.