அதுபோல்தான்" என்றான்.
இவ்வளவு அமைதியாக அறிவாகப் பேசுகிறானே என்று வியந்தேன். நேற்றோடு அவனுடைய கதறலும் அழுகையும் உணர்ச்சியும் முடிந்தன என்று மகிழ்ந்தேன்.
ஆனால் மலையில் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தபோது, முன் நாள் போலவே உடம்பைச் சொரிந்து கொண்டும் தலையை அசைத்துக் கொண்டும் அமைதி இல்லாமல் இருந்தான். காப்பி குடித்துக் கால்மணி நேரம் ஆனதும், பெருமூச்சும் அய்யோ என்ற குரலும் கேட்டன. "வேலு! நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கணும்? என்னால் இனிமேல் யாருக்கு நன்மை ஏற்படப்போகிறது? பெற்ற தாய் இல்லை. தந்தை முகத்தில் நான் விழிக்கப்போவதில்லை. கட்டின மனைவியும் இல்லை. ஏன்'பா இந்த வாழ்வு?" என்று கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான். சிறிது நேரம் அமைதியானேன். ஏதோ பழைய நிகழ்ச்சியை நினைத்துக்கொண்டு குமுறுகிறான் என்பது முகக்குறிப்பால் தெரிந்தது. "நம் தோட்டத்தில் சொக்கான் என்று ஒருத்தன் இருந்தானே, நினைவு இருக்கிறதா? ஏழைக் குடும்பம். அவனுடைய பெண் அழகாக இருந்தாள். பக்கத்து ஊரில் கொடுத்திருந்தான். நான் அந்தக் குடும்பத்தையும் கெடுத்தேன். அப்போது பாவம் என்ற எண்ணமே இல்லாமல் பணம் கொடுத்து ஏமாற்றிவிட்டேன். அப்பா கேள்விப் பட்டிருந்தால், என்னைப் பற்றி என்ன நினைப்பார்? இப்படிப்பட்ட கெட்ட வழி அப்பாவுக்குத் தெரியவே தெரியாது. அந்த உத்தமர் வயிற்றில் பிறந்த நான், எவ்வளவு அநியாயம் செய்தேன். நான் ஏன் அந்தக் குடும்பத்தில் பிறந்தேனோ, அய்யய்யோ!" என்று ஒரு பேதைப் பெண் போல் புலம்பினான். உடனே, "அப்போதே அதற்குத் தண்டனையும் அனுபவித்தேன். ஒருத்தி என்னை ஏமாற்றினாள். இரண்டு பவுனில் சங்கிலி ஒன்று செய்து போட்டால் சரி என்று ஒருத்தி ஒப்புக் கொண்டாள். மனைவி கழுத்தில் நாலு பவுன் சங்கிலி ஒன்று இருந்தது. அதைக் கழற்றிக் கொண்டு போனேன். அவளுடைய குடிசையில் அவள் சொன்ன நேரத்தில் நுழைந்து சங்கிலியைக் கொடுத்து விட்டுப் பேசிக் கொண்டிருந்தேன். வெளியேயிருந்து அவளுடைய கணவனும் இன்னொருத்தனும் திடீரென்று நுழைந்தார்கள். அந்த மோசக்காரி ஓ என்று கூச்சலிட்டாள். வந்தவர்கள் என் முதுகைப் பழுக்கப் பார்த்தார்கள். தாம்புக் கயிறு கொண்டு அடித்தார்கள். வீட்டுக்குத் திரும்பியபோது முதுகில் கறை இருந்ததை எப்படியோ மனைவி பார்த்து விட்டாள். என்னிடம் வாய் திறந்து கேட்கத் தைரியம் இல்லை. அழுதுகொண்டு போய் என் அத்தையிடம் சொல்லியிருக்கிறாள். அத்தை அப்போது இருந்தார். நான் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது அத்தை என் முதுகுப்பக்கம் வந்து உட்கார்ந்து பார்த்து வருத்தப்பட்டிருக்கிறார். நான் விழித்தபோது