Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 32 - சு. சமுத்திரம்
சரோசா, முனியம்மாவிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவள் பின்னாலேயே போனாள். ஆட்டோவிலும் அவளும் போலீஸ்காரரும் பேசிய பேச்சுக்கூட அவளுக்குக் கேட்கவில்லை. இப்போது எந்த இடத்தில் இருக்கிறோம் என்ற தெளிவும் இல்லை. தெரிந்து கொள்வதற்குரிய அக்கறையுமில்லை. ஒரே ஒரு சமயத்தில் மட்டும் கொலைக்காரர்களை விசாரிக்கும் தனிப்பட்ட காவல் நிலையம் அந்த மாடியில் இருக்குமோ என்று லேசாய் நினைத்துக் கொண்டாள்.
முனியம்மாவும் அவள் முதுகைப் பிடித்து லேசு லேசாகத் தள்ளினாளே தவிர அவளிடம் எதுவும் பேசவில்லை.
மூன்று சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பில் வடக்கு தெற்கான சாலையின் முனையில் உள்ள இரண்டாவது கட்டிடத்தின் முதலாவது மாடி, விசாலமான பெரிய அறை. அதன் இரு முனைகளிலும் சின்னச் சின்ன அறைகள். கதவுக்கு மேலேயும், அந்த அறைச்சுவர் ஒன்றிலும் ‘சமதர்ம மாதர் மன்றம்' என்ற போர்டுகள் தொங்கின. உள்ளே ஒரு பக்கமாய் ஒரு சாதாரண நாற்காலி; அதன் முன்னால் சராசரி மேஜை. கட்டுக்கட்டான பேப்பர்கள். ஒவ்வொன்றும், ஒன்றின் மேல் ஒன்றாக இல்லாமல், ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேஜை முனையின் இருபுறமும் பிரம்பு நாற்காலிகள். அதன் முன்னால் இரண்டு வரிசையில், சின்னச் சின்ன இரும்பு நாற்காலிகள். பக்கவாட்டில் பெஞ்சுகள். மேஜையோடு ஜோடி சேர்ந்த ‘எஸ்' வடிவ நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெண்ணிற்கு, நாற்பது வயதிருக்கலாம். பொட்டில்லாத நெற்றி. நகை நட்டுக்களால் சின்னாபின்னமாகாத கூரிய மூக்கு. எவரையும் பார்த்ததும் மோவாயை கீழே தள்ளி, கண்களை முன்னால் தள்ளிப் பார்க்கும் ஒரு ஆர்வப் பார்வை. பெஞ்சுகளில் பஞ்சையாய் - பராரியாய்ப் போன பல பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களது ஆடைக்கு அப்பால் வெளிப்பட்ட முதுகுகளிலும், முகங்களிலும் வரதட்சணைத் தழும்புகள்; பெற்ற பிள்ளைகள் கொடுத்த நன்றிக் கடன்கள். இவர்களில் சிலர் தள்ளாடும் மூதாட்டிகள். சிலர், தாலாட்டும் இளம் பெண்கள். ஒவ்வொருத்தி தலையும் ஏதோ சுமக்க முடியாத ஒரு பெருஞ்சுமையை சுமப்பது போல் தாழ்ந்து கிடந்தது. முனியம்மாவை அங்கீகாரத்துடனும், அவளோடு வந்தவளை அழுத்தமாகவும் பார்த்த தனி நாற்காலியில் உட்கார்ந்திருந்த அந்த அம்மா, கும்பிட்ட முனியம்மாவிற்கு பதில் கும்பிடு போட்டுவிட்டே கேட்டாள்: