உன்னை தண்டிக்க முடியாது. ஒருவேளை நீ இந்த மன்றத்துக்கு வராமல் இருந்தா அது பேற விஷயம். எப்போது எங்க கிட்ட நீ வந்திட்டியோ அப்போ நீ செய்யாத குற்றத்துக்குத் தண்டனை வாங்க முடியாது. அதைத் தடுக்கிற சக்தி எங்க மன்றத்துக்கு உண்டு. இது சத்தியம். வாயைத் திறந்து உன் வாழ்க்கை முழுசையும் நல்லதோ கெட்டதோ அப்படியே கொட்டு. நீயே உனக்கு சாட்சி சொல்லாட்டால், என் பேச்சோ, இந்த முனியம்மா பேச்சோ எடுபடாது. நீ மட்டும் கொலை செய்யாட்டால் உன் மேல ஒரு துரும்பு கூட விழாது. சொல்லும்மா."
சரோசா, லேசாய்க் கண் விழித்தாள். அந்த இடத்தை அப்போதுதான் பார்ப்பது போல் பார்த்தாள். அந்த அம்மாவை நம்பாதது போலும் பார்த்தாள். லேசு லேசாய் உறைந்துபோன அவள் உடம்பினுள், ஏதோ ஒரு சூடு உட்பரவி, உள்ளத்துள்ளும் பரவியது. பனிக்கட்டியாய் உறைந்து போன மனம் மெல்ல மெல்ல கசிந்தது. மனக்கட்டி உடைந்து, மனோவாதை குணமாகவில்லை என்றாலும், குறைவது போன்ற ஒரு மாற்றம். மனதுக்குள் இருந்த பனிக்கட்டியை ஏதோ ஒரு நெருப்புக்கட்டி எரித்துவிட்டு ஜோதி மயமாய் ஒளிர்ந்தது. அதில் அண்ணாத்தே எரிந்து கொண்டிருந்தான். துரை அண்ணனின் ‘தர்மபத்தினி’ கரிந்து கொண்டிருந்தாள். சரோசா அந்த அம்மாவையே உற்று உற்றுப் பார்த்தாள். லேசாய் சிரித்தாள். அதைவிட, சிரிக்கப் போனாள் என்று சொல்லலாம். இதற்குள் நாற்காலிகளில் இருந்த பெண்கள், ‘சொல்லும்மா,' 'சொல்லும்மா' என்று மாறி மாறிச் சொன்னார்கள். சரோசா அந்த அம்மாவையே பார்த்தாள். 'எல்லாம் எனக்குத் தெரியும்' என்பது மாதிரியான தோரணை இல்லாமல், ‘எல்லாம் தெரிய வேண்டும்' என்பது மாதிரியான நளினமான முக இறுக்கம். அதே சமயம், பயபக்தியை உருவாக்காமல் தோழமை உணர்வை ஏற்படுத்தும் பார்வை.
சரோசாவின் தலை, அந்த அம்மாவின் தோளில் விழுந்தது. ஒரு குழந்தையாகி அந்தத் தோளே ஒரு தொட்டில் என்பதுபோல், அங்குமிங்குமாய் தலையை புரட்டி அரற்றினாள். அவளை, அவள் போக்கில் சில நிமிடங்கள் விட்டு வைத்த அந்த அம்மாள், அவள் தலையை நிமிர்த்தினாள். பிறகு "நீ இங்கே வைச்சு சொல்லணும் என்றாலும் சொல்லு. இல்ல, அந்த அறைக்குள்ள வந்து சொல்லணும் என்றாலும் சொல்லு” என்றாள்.
சரோசா, தன் பார்வையில் பட்ட அனைவரையும் பார்த்தாள். அத்தனை முகங்களிலும் அவளுக்கான ஒரு ஆறுதல் பார்வை இருப்பதைக் கண்டுகொண்டது போல் முகத்தைத் துடைத்தாள். தன்னாலும் மீள முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அண்ணாத்தைக்கும்