"எப்படி இருக்கே முனியம்மா? உன் வீட்டுக்காரன் மாசா மாசம் தர வேண்டியதைத் தரானா?”
“கழுதப் பய தாராம்மா."
"இன்னும் உனக்குக் கோபம் போகலையா?”
“என் வயித்துல எரியறது அணையா அக்னிம்மா. அதை மூட்டுனவனாலகூட இப்ப அணைக்க முடியாது. ரெண்டாவது ஒருத்திய சேர்த்து அவளுக்கும் மூணு வருஷத்துல ரெண்டு பிள்ளையைக் கொடுத்திட்டான். அவள்தான் என் வாழ்க்கையில அறிவில்லாம குறுக்கிட்டாள்; எனக்கு உரிமை இருந்தாலும், நான் அவள் வாழ்க்கையில குறுக்கிட விரும்பலம்மா. அதோட, ஒப்புக்கு வாழறவனோட வாழுகிற வாழ்க்கை உப்பில்லாத சாப்பாடு மாதிரின்னு உங்களுக்குத் தெரியாதா என்ன ஏதோ நீங்க தலையிட்டு இந்த அடாவடிக்காரனை அரட்டி உருட்டி அவங்கிட்டருந்து பொண்டாட்டியா, ரிட்டயரான எனக்கு பென்சன் வாங்கிக் கொடுத்திட்டீங்க. நீங்க நல்லா இருக்கணும். அப்பதான் என்னை மாதிரி இவள மாதிரி இருக்கற பொண்ணுங்க நல்லா இருக்க முடியும்."
அந்த அம்மாவுக்கு அவள் சொன்னதில் பெருமைப்படுவதா அல்லது சிறுமைப்படுவதா என்று தெரியவில்லை. முழுமையாகப் பலன் கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கமும், பாதி அளவுக்காவது பலிக்கிறதே என்ற திருப்தியும் முகத்தில் ஒருசேரத் தெரிந்தது. பிறகு இதற்கெல்லாம் தான் மட்டும் காரணமல்ல; அதோ தன் முன்னால் நாற்காலிகளில் உட்கார்ந்திருக்கும் ஐந்தாறு பெண்களும், அந்த அமைப்பும் காரணம் என்பதுபோல் அவர்களைப் பார்த்தாள்.
அந்தப் பெண்களில் இருவர், அந்த அம்மாவைப் போல் நடுத்தரங்கள். அவர்கள் முகங்களிலும் தீட்சண்யப் பார்வை. எஞ்சிய மூவரில் இருவர் இளம் பெண்கள். ஆனாலும், ஒருவித முதிர்ச்சியான பார்வை. ஒரே ஒருத்தி மட்டும் அங்குமிங்குமாய் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தோற்றத்தை வைத்து எதுவும் அனுமானிக்க முடியவில்லை. முனியம்மா, சரோசாவையே பார்த்துக் கொண்டிருந்த அந்த அம்மாவுக்குக் கோடி காட்டினாள்.
"இதோ பித்துப் பிடிச்சு நிக்குதே பாவிப்பொண்ணு, இது பட்டபாடும், படும் பாடும் கொஞ்சநஞ்ச