மீதமேயிருக்க மாட்டாங்க."
அருவி நீரில் குளித்த குஷியில் வேணுமாமாவும் நாயுடுவும் வாலிபர்களாகியிருந்தார்கள். அதனால் பெண்கள் உடை மாற்றிக் கொண்டு வரும்வரை நாயுடுவின் அரசியல் விமர்சனம் தொடர்ந்தது.
"பார்க்கப் போனா நம்ம நாட்டு அரசியலும் 'ப்ளாண்டேஷனும்' ஒரே மாதிரி தான் இருக்குதுங்க. பயிரிடறது, அறுவடை செய்யிறது, களையெடுக்கிறது எல்லாம் இரண்டுக்கும் பொதுவானதாக இருக்கும். 'ப்ளாண்டேஷன்' பாஷையிலேதான் அடிக்கடி அரசியலைப் பத்தியே பேசிக்கிறாங்க. யாராவது இளைஞர்கள் முன்னுக்கு வந்தா 'மொளச்சு மூணெலைப் போடறதுக்குள்ளே தலைவனாயிட்டான்' கிறாங்க. 'எலெஷன்ல' செலவழிச்சான். இப்ப 'அறுவடை' பண்ணிட்டான்கிறாங்க. புல்லுருவிகளைக் கட்சியிலேருந்து 'களையெடுத்துட்டோம்'கிறாங்க."
"ஏதேது? இதைப் பற்றி ஒரு பெரிய தீஸிஸ் எழுதற அளவு விஷயங்கள் சேகரிச்சு வச்சிருப்பீங்க போலிருக்கே?" என்று சொல்லிச் சிரித்தான் ரவி.
"அது மட்டுமில்லீங்க, விவசாயத்திலே எப்படி நெல்லைப் போட்டா மறுபடி நெல்லு முளைக்குதோ அது மாதிரி ஒரு குடும்பத்திலே ஒருத்தர் அரசியல்வாதியா வந்து பதவியோட சுகம் கண்டுட்டா, நம்ம தேசத்திலே அப்புறமா அந்தப் பரம்பரையிலே யாரும் அரசியலையோ பதவிங்களையோ விடறதே இல்லீங்களே?"
"எலிஃபண்ட் வேலிக்குப் போகலாம்னீங்களே? நேரமாகலியா நாயுடுகாரு?
வேணுமாமா நாயுடுவின் கவனத்தைத் திசை திருப்பினார். கமலியும் வசந்தியும் உடை மாற்றிக் கொண்டு புறப்படத் தயாராக வந்திருந்தார்கள்.
மறுபடி ஜீப்பில் புறப்பட்டார்கள் அவர்கள்.
"உங்க வீட்டிலேருந்து யாரையும் அருவியில் குளிக்கக் கூட்டிண்டு வரலியே நாயுடுகாரு?" என்று ஜீப்பில் போகும்போது நாயுடுவைக் கேட்டார் வேணுமாமா.