அதைச் சொல்லாம உள்ளேயே அந்தரங்கமா மனசுலே வச்சுண்டுடறது இன்னும் சிரேஷ்டம்."-
"நல்லதை - நல்லது செய்யிற யோக்கியனை உடனே புகழ்ந்துடணும்பாரு ஐயா. அப்பிடிப்பட்டவங்களைக் கொஞ்சம் முரட்டு வார்த்தைகளாப் பொறுக்கி எடுத்துப் போட்டுச் சொல்லிக்கூடப் புகழலாம்பாரு..."
"அதனாலேதான் புகழறத்துக்காக நல்லது செய்யறவாள்னும் புகழை எதிர்பார்த்து நல்லது செய்யறவாள்னும் புகழுக்கு ஏற்பாடு செய்துகொண்டு நல்லது செய்யறவாள்னும் பல புதுப்புதுப் பிரிவுகள் இப்பல்லாம் ஜனங்கள் மத்தியிலே உண்டாயிண்டிருக்கு. ஒரு புஷ்பம் அபார வாசனையோட இருக்கலாம். ஆனா அந்த வாசனை அதை மோந்து பாக்கறவா எல்லாருக்கும் மட்டும் புரிஞ்சாலே போறும். தான் இத்தனை வாசனைன்னு அந்தப் புஷ்பத்துக்கே புரியணும்னு அவசியமில்லே தேசிகாமணி! சாஸ்திரங்கள்ளே மதுபானப் பிரியனா வெறியோடவும் தாகத்தோடவும் அதைத் தவிச்சுத் தேடி அலையறவனோட ஒப்பிட்டுத்தான் புகழையும் ஸ்தோத்திரத்தையும் வலுவிலே தேடி அலையறதைச் சொல்லியிருக்கா. புகழும் ஒருவிதமான மதுபானம்தான் தேசிகாமணி!"
தாம் சொல்லி விடை பெற்றுக்கொண்டு புறப்படக் கருதிய இறைமுடிமணி பேச்சை உடனே வேறு விஷயத்துக்கு மாற்றினார்:
"நம்ம தம்பியோட வந்திருக்கே பிரெஞ்சுக்காரி, அது தங்கமான பொண்ணாத் தெரியுது. தமிழ் நல்லாப் பேசுதே? நீ இங்கேயிருந்து எந்திரிச்சுப் போறவரை உனக்கு முன்னாலே உட்காரவே இல்லேப்பா அந்தப் பொண்ணு! உம்மேலே நல்ல மரியாதைப்பா அதுக்கு...."
"அது மட்டுமில்லே. நல்ல படிப்புள்ளவள். புத்திசாலி"
"ஒரு பிரெஞ்சுப் பொண்ணு இத்தினி அருமையாத் தமிழ் பேசறது அபூர்வமான விஷயம்ப்பா. உனக்கு ஆட்சேபணையில்லாட்டி நான் கூட அவங்களுக்கு நம்ம படிப்பகத்திலே ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ணி வரவேற்புக் குடுத்துப் பேசச் சொல்லலாம்னு நினைக்கிறேன்... தம்பி ரொம்பக் குடுத்து வச்சிருக்கு. அழகு, அறிவு, இங்கிதம் மூணுமாகச் சேர்ந்து அமையற வாழ்க்கைத் துணை கிடைக்கிறது பெரிய காரியம்."