"ஆமாம்! எனக்கு நாழியாறது... சந்தியா வந்தனத்துக்குப் போயாகணும், தேதி போட்டுக் குடுங்கோ...."
சீமாவையர் தேதியைப் போட்டுக் கடிதத்தைச் சர்மாவிடம் திருப்பிக் கொடுத்தார்.
"சரி! பதில் வந்ததும் நானே சொல்லியனுப்பறேன், நமஸ்காரம்" - என்று அவர்களுக்குப் பெரிதாக ஒரு கும்பிடு போட்டு விட்டு எழுந்திருந்தார் சர்மா.
சீமாவையரும் அஹமத் அலியும் புறப்பட்டார்கள். சர்மா உள்ளே சென்றபோது கமலி விளக்குடன் வந்து போனது பற்றியே அவர் சிந்தனை இருந்தது. அந்தக் காட்சி பல சமஸ்கிருதக் காவியங்களைப் படித்துப் படித்து நயம் சேர்ந்திருந்த அவர் மனத்தில் 'சிறிய தீபத்துடன் ஒரு சுவர்ண தீபம் உயிரோடு நடந்து வந்து திரும்பிச் சென்றது' போல் தோன்றினாலும் அது எப்படி நேர்ந்தது? அவளாக விளக்கேற்றிக் கொண்டு வந்தாளா? யாராவது சொல்லி அப்படிச் செய்தாளா? வெறும் வாயையே மெல்லுகிற சீமாவையர் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரியாகப் பண்ணிவிட்டாளே? - என்ற சிறு தயக்கமும் கூடவே இருந்தது.
கமலி என்ற பிரெஞ்சு யுவதி தன் மகன் ரவியுடன் வந்து தங்கியிருப்பதைப் பிறர் அறியாமல் வைத்திருப்பதென்பது அந்தச் சிறிய கிராமத்தில் இயலாத காரியம் என்பதையும் அச் செய்தி தானாகவே அதற்குள் கிராமத்திலும், சுற்றுப்புறங்களிலும் பரவியிருக்கும் என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தாலும் அயோக்கியனான சீமாவையரின் முன்னிலையில், கமலி இப்படி ஒரு தர்ம சங்கடத்தை உண்டாக்கி விட்டாளே என்று ஒரு சிறிய கலக்கமும் உள்ளூர இருக்கத்தான் செய்தது.
தன் மகனுடன் ஒரு பிரெஞ்சு பெண் வந்திருக்கிறாள் என்பது அதுவரை சீமாவையருக்குத் தெரியாமல் இருக்கவும் நியாயமில்லை. முன்பே தெரிந்திருப்பதை உள்ளேயே வைத்துக் கொண்டு, அப்போது தான் புதிதாகத் தெரிந்து கொண்டு விசாரிப்பது போல் வியந்து விசாரித்த சீமாவையரின் குள்ள நரித் தந்திரம் தான் அவருக்கு எரிச்சலூட்டியது.
கடிதங்கள், மடத்து விவரங்களடங்கிய நோட்டுப் புத்தகம் எல்லாவற்றையும் அதற்கென்றிருந்த