"இல்லீங்க... நம்ம ஐயாவே வந்துடறேன்னு புறப்பட்டுக் கூட வந்துட்டாங்க?"
"உட்காருங்க சீமாவையர்வாள்! இதுக்காக நீங்க சிரமப்பட்டு இத்தனை தூரம் வந்தே இருக்க வேண்டாம்..."
சீமாவையர் வெற்றிலைப் பெட்டியையும் பிரம்பையும் முதலில் திண்ணையில் வைத்து விட்டு அப்புறம் உட்கார்ந்தார்.
"வரவேண்டானுதான் பார்த்தேன். மனசு கேக்கலே. மடத்துச் சொத்து நல்ல மனுஷாளுக்குப் பிரயோஜனப்படணும், மடத்துக்கும் பிரயோஜனப்படணும்...."
"வாஸ்தவம். அதில் சந்தேகமென்ன? ரெண்டாவது அபிப்ராயத்துக்கே இடமில்லாத விஷயம் அது."
"பேசறதென்னவோ தேனொழுகப் பேசிடறேள், ஆனால் காரியத்திலே ஒண்ணும் பண்ண மாட்டேங்கறேளே?..."
அவர் சொற்படி கேளாமல் முந்திய நாள் ஸ்ரீ மடத்து நிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தான் ஒத்திப் போட்டுத் தள்ளி வைத்த கோபமும் சீமாவையருக்குள் சேர்ந்து இருக்கிறது என்று இப்போது சர்மாவுக்குப் புரிந்தது.
தெருத் திண்ணையில் வீட்டு வாசலில் மூன்றாம் மனிதரான அஹமத் அலி பாயையும் வைத்துக் கொண்டு சீமாவையரோடு குறைந்த பட்சம் ஒரு வாக்கு வாதத்துக்கோ, அதிக பட்சம் சண்டைக்கோ சர்மா தயாராயில்லை. அவருடைய படிப்பும் பண்பாடும் அநாவசியமாக இரைந்து கூப்பாடு போட முடியாதபடி அவர் மனத்தில் பக்குவத்தையும் அடக்கத்தையும் மெருகேற்றியிருந்தன. காது சற்று மந்தமான தன் மனைவி காமாட்சியம்மாளுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காக இரைந்து பேசும் சமயங்களில் கூட அதற்காகக் கூச்சப்பட்டுக் கொண்டேதான் அப்படிச் செய்வார் அவர். சீமாவையாரைப் போல் அட்டகாசமாகப் பேச அவருக்கு ஒரு போதும் வந்ததில்லை. கூடியவரை சுமுகமாகப் பேசிச் சீமாவையாரை