இப்போது அனுப்பி வைக்க விரும்பினார் சர்மா.
சாயங்காலமாயிருந்தது. விளக்கு வைக்கிற நேரத்துக்கு வீட்டுத் திண்ணையில் சண்டை சத்தம் வேண்டாம் என்று எண்ணியவராய், "இப்போ நான் என்ன பண்ணணும்கறேள்? எனக்கு நாழியாச்சு, சந்தியா வந்தனத்துக்கு ஆத்தங்கரைக்குப் புறப்படணும். உங்களுக்கும் ஏகப்பட்ட ஜோலி இருக்கும். பெரிய மனுஷாளை நான் ரொம்பக் காக்க வைக்கப்படாது. வந்த காரியத்தைச் சொல்லுங்கோ" - என்றார் சர்மா.
"மறுபடியும் நான் சொல்லணுமா ஓய்? அதான் அப்பவே லெட்டர் எழுதிக் குடுத்தனுப்பிச்சேனே... நம்ம பாய்க்கு அந்த வடக்குத் தெரு எடத்தை விடணும்..."
"சரி! பாயோ, நீங்களோ ஒரு லெட்டர் எழுத்க் குடுத்துட்டுப் போங்கோ, அதை அப்படியே மேலே மடத்துக்கு அனுப்பிச்சு அங்கேயிருந்து பதில் வந்ததும் சொல்றேன்..."
"நான் முன்னாலே குடுத்தனுப்பின லெட்டரை அனுப்பினாலே போறும்." -
- சர்மா மறுபடியும் அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்துவிட்டு, "சீமாவையர்வாள்! இதிலே தேதி போடலே; தேதி போட்டுக் குடுத்திட்டுப் போங்கோ-" என்று அவரிடமே திருப்பி நீட்டினார்.
வீட்டுக்குள்ளேயிருந்து யாரோ சந்தியா கால விளக்கு ஏற்றி வரும் ஒளி இடைகழியிலிருந்து படர்ந்தது. சர்மா வீட்டின் இடைகழியைப் பார்த்தார். அவரே எதிர்பாராதபடி கமலி கையில் விளக்கோடு வந்து அதைப் பிறையில் வைத்து விட்டுப் போனாள். ஒரு சுவர்ண தீபம் இன்னொரு வெறுந் தீபத்தோடு வந்து போனதைச் சீமாவையாரும், அஹமத் அலியும் கூடப் பார்த்தனர்.
"யாரு? புதுசா இருக்கே?"
"இங்கே வந்திருக்கா...?"
"ஈரோப்பியன் மாதிரியின்னா இருக்கு?......"