திடீரென்று அதே வயதுள்ள ஓர் அந்நிய தேசத்துப் பெண்ணை மட்டும் 'நீங்கள்' என்று அழைக்க வரவில்லை. காரணம் அவருடைய உள் மனமோ, அந்தரங்கமோ அவளை அந்நியமாக எண்ணவில்லை. அவள் தனது அழகிய கம்பீரமான தோற்றத்தால், இரயிலிலிருந்து இறங்கிய முதல் கணமே இந்திய முறைப்படி அவருடைய கால்களைத் தொழுத பண்பால், விசாலமான அறிவு நுணுக்கத்தால், அவரை முக்கால்வாசி மனமிளகச் செய்திருந்தாள்.
காமாட்சியம்மாள் இருந்த இடத்திலிருந்தபடியே மாவரைத்துக் கொண்டு பாருவைக் கூப்பிட்டு விளக்கேற்றும்படி இரைந்த சொற்களைக் கேட்டுக் கமலி தானே வந்து விளக்கேற்றி வாசல் திண்ணைப் பிறையில் கொண்டு வந்து வைத்து விட்டுப் போன இங்கிதம் அவரை உள்ளேயே நினைந்து நினைந்து பூரிக்கச் செய்தது. அந்த இனிய பூரிப்பில் சிறு முள்ளாக உறுத்திய ஒரே ஒரு குறை, அவள் விளக்கேற்றிக் கொண்டு திண்ணைக்கு வரும்போது சீமாவையர் திண்ணையில் இருந்ததும் அவளைப் பற்றி விசாரித்ததும் தான்.
இறைமுடிமணி சென்றவுடன் சீமாவையர் அஹமத் அலியோடு வந்ததற்கும் மடத்துக் குமாஸ்தாதான் காரணமாயிருக்கும் என்று சர்மாவால் அநுமானித்துக் கொள்ள முடிந்தது. நேரே போய்ச் சீமாவையரிடம் விஷயத்தைச் சொல்லி விட்டுத்தான் அவன் போயிருப்பான் என்று அவருக்குப் பட்டது. வடக்குத் தெரு மனையை இறைமுடிமணிக்குப் பேசி விட்டாயிற்று என்று தெரிந்தும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் சீமாவையர் தன்னிடம் தகராறுக்கு வந்ததைத் தாம் நாசூக்காகச் சமாளித்து விட்டதாகச் சர்மா எண்ணிக் கொண்டார். சீமாவையரின் கடிதத்தை மடத்துக்கு அனுப்பி வைத்து விவரம் எழுதினால், "ஏற்கெனவே ஒருவருக்கு வாக்களித்தபடி வடக்குத் தெரு மனையை வாடகைக்கு விட்டாயிற்று. எனவே ஸ்ரீ மடத்தின் முந்திய முத்திராதிகாரியும் சிஷ்யரும் ஆகிய தங்கள் சிபாரிசை ஏற்க இயலாததற்கு மன்னிக்கவும்" என்று மடத்திலிருந்தே சீமாவையருக்குப் பதில் வந்து விடும். அந்தப் பதிலை அப்படியே சீமாவையருக்குப் காண்பித்து விடலாம். இதனால் தமக்கும் அவருக்கும் நேரடியாக விரோதம் எதுவும் வராது என்று எண்ணிக் கொண்டிருந்தார் சர்மா.
இணையற்ற சாஸ்திர ஞானமும் பாண்டியத்தியமும் அவருக்கு அளித்திருந்த சஹ்ருதயப் பாங்கு யாரோடும் பூசலும், போட்டியும், சண்டையும், சச்சரவும் இடமுடியாத படி அவரைச் செய்திருந்தன. பிறரையும் பிறவற்றையும் துன்புறுத்தவோ கொல்லவோ கூடாது என்ற சாதாரண சன்மார்க்கத்திற்கும் ஒரு படி மேலே போய்ப் பிறர் மனம் புண்படும்படிப் பேசவும்