"வாழ்க்கைத் துணையா இல்லையான்னு இனிமேல் தான் முடிவாகணும்..." - சர்மா சிரித்தபடிதான் இதைச் சொன்னார். ஆனால் இறைமுடிமணி விடவில்லை - அப்போதே சாடத் தொடங்கி விட்டார்.
"ஒருத்தர் தன் துணையைப் பற்றி முடிவு பண்ணிக்கிறத்துக்கு மத்தவங்க யாருப்பா வேணும்?"
"நடைமுறை உலகத்திலே மத்தவங்க அபிப்பிராயமும் வேண்டியதாக இருக்கே! அப்பா, அம்மா, ஊர், உலகம் எல்லாரையும் எதிர்பார்த்துதானே இங்கே எல்லாம் செய்ய வேண்டியிருக்கு."
"குழந்தைங்க நல்லா மகிழ்ச்சியா இருக்கட்டும்பா! சாதி சம்பிரதாயம், குலம் கோத்திரம்னு நீ அவங்க வாழ்க்கையை அழிச்சிடப்படாது..."-
"பார்க்கலாம்...அப்புறம்...."
"சரி! நான் வரேன்ப்பா. அந்தப் பொண்ணுகிட்டவும் தம்பிகிட்டவும் சொல்லிடு. அப்புறம் பார்க்கிறேன். நம்ம புனித அந்தோணியர் ஸ்கூல் டீச்சர் மலர்க்கொடி விஷயமாச் சீமாவையாரைக் கொஞ்சம் கண்டிச்சு வை. மறந்துடாதே" என்று கூறி விடைபெற்றுக் கொண்டு போனார் இறைமுடிமணி.
இறைமுடிமணியின் தலை தெருத் திருப்பத்தில் மேற்குப் பக்கம் மறைந்ததுமே அஹமத் அலிபாய் - சீமாவையரோடு தம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டார் சர்மா.
வீட்டுக்கு உள்ளே போக எழுந்திருந்தவர் அவர்கள் வருவதைப் பார்த்ததும் மீண்டும் திண்ணையிலேயே உட்கார்ந்தார்.
படியேறி வந்து அவர்கள் பேச்சைத் தொடங்குவதற்கு முன் சர்மாவே தொடங்கிவிட்டார்.
"என்ன பாய்? நான் தான் சொல்லி அனுப்பியிருந்தேனே? இதுக்குள்ளே அவாளைப் போய் ஏன் சிரமப் படுத்தினேள்?"