அன்றிரவு கைகால் வெட்டிய பிறகு, அவன் மாத்திரைகளை வீசியெறிந்து விட்டான். இன்றும் வழக்கம் போல் அவனுள் ஒரு கலக்கம். ஒரு ஆசை நிராசையானது போன்ற விரக்தி. மூர்த்தியும் முத்துவும் தேர்தல் களேபரத்தில் அவனைக் கண்டு கொள்ளவில்லை.
தனித்து விடப்பட்ட சுயம்பு, கேட்பாரும் மேய்ப் பாரும் இல்லாமல் மருத்துவ மாணவர் விடுதிப் பக்கம் போனான். டேவிட்டிடம், தனது ஆசைகளையும் நிராசைகளையும் கொட்டித் தீர்க்க வேண்டுமென்ற ஒரு ஆவல். ஆனால், அவன் போன இடத்திலோ யாருமில்லை. எல்லோரும் வேடிக்கை பார்க்கப் போய்விட்டார்கள். டேவிட்டும் ஒரு சிறிய குழுவும் தேர்தலில் வன்முறை ஏற்பட்டால் முதலுதவி செய்வதற்கு ஏதோ டிஞ்சரும் பஞ்சும் வாங்கப் போய்விட்டதாக, சுயம்பு விசாரித்தபோது, ஒருத்தன் சொன்னான். உண்மையோ, பொய்யோ... கிண்டலோ...
சுயம்பு, அங்கும் இங்குமாய் வெருண்டு வெருண்டு நடந்தான். டேவிட்டைப் பார்க்க முடியாமல் போனது, அவன் கால்களைத் திருக்கிவிட்டது. நரம்புகளை முடுக்கி விட்டது. அங்குமிங்குமாய்ப் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தை ஒரு கிலோ மீட்டர் பகுதிக்குள்ளேயே சுற்றி விட்டான். ஒரு விடுதி வழியே தன் பாட்டுக்கு நடந்தான். அப்போது ஸ்கூட்டரில் கருப்புக் கண்ணாடி போட்ட ஒருத்தி இரு கால்களையும் இருபக்கமும் பரப்பி தரையில் ஊன்றிக்கொண்டு ‘வாக்களிக்காதவர்கள் வரலாம் வரலாம்’ என்று ஏலக்காரி போல் மூன்று தடவை கத்தினாள். கருப்புக் கண்ணாடி போட்டு பெண் ரெளடிபோல் தோன்றிய அவளைப் பார்த்துவிட்டுப் பல மாணவிகள் தத்தம் அறைகளையே, சுயச்சிறைகளாக மாற்றிக் கொண்டார்கள்.
சுயம்பு யோசித்தான். அவனும் வோட்டுப் போடணுமே... மூர்த்தியை ஜெயிக்க வைக்கணுமே. எப்பாடி. என்னமா காலு வலிக்குது. அவர இதுக்கு மேல தேடி நடக்க முடியாதும்மா...
சுயம்பு, அந்த ஸ்கூட்டர்காரியிடம் நேரிடையாகப் போனான். அவள் வேறு எங்கேயோ பார்த்துக் கொண் டிருந்தபோது, இவன், அந்த ஸ்கூட்டரின் பின் இருக்கையில் பட்டும் படாமலும், உட்கார்ந்தபடியே அவளிடம் கெஞ்சிக் கேட்டான்.
“நானும் வோட்டுப் போடணும்... வாக்குச் சாவடில என்னை இறக்கிடுறியா அக்கா...”
அவளுக்கு அவன் அப்படி நெருக்கியடித்து அமர்ந்ததில் பாதிக் கோபம். அக்கா என்றழைத்ததில்