மன்னிப்புக் கேட்கச் சொல்றேன் அண்ணே. டேய் சுயம்பு. அறிவு கெட்டவனே. அவங்ககிட்ட மன்னிப்புக் கேளுடா” என்று கத்தினான்.
சுயம்புவும், அவளிடம் மன்னிப்புக் கேட்பதற்காக முகத்தைக் குழைத்தான். அவளும் அதை ஏற்றுக் கொள்ளப் போகிறவள் போல் கையிலிருந்த ‘ஒற்றைச் சிலம்பைக்’ கீழே போட்டாள். தாய்க்குலம், ஏற்கெனவே பேர் வாங்கிய சுயம்புவை, கருணையோடு பார்த்தது. அந்தக் கருணை மூர்த்திக்கு ஆதரவாகக் கைகளில் வந்துவிடக் கூடாதே என்று எச்சரிக்கையான பொன்முகன், ஒரு புகார்ப் பட்டியலையே அடுக்கினான்.
“இந்த மாதிரி வேற எங்கயோ , லேடீஸ்கிட்ட கலாட்டா பண்ண நீ போயிருக்கிறே. ஒன் பேட்ச் பசங்க என்னடான்னா, நாங்கள் - சீனியர்கள் ஒன்னைக் கடத்துனதா புகார் கொடுக்கிறான்கள். நீ என்னடான்னால், அன்றைக்கு அந்த எம்.பி.பி.எஸ். பெண்ண மொலஸ்ட் செய்யப் போனே. இன்னிக்கு என்னடான்னா, இந்த பிரமிளாகிட்ட வம்பு செய்யுறே. இதுல நீ மட்டும் சம்பந்தப் படலடா. சீனியர்களுக்கு எதிரா ஒரு பெரிய திட்டமிட்ட சதியே இருக்குது!”
பொன்முகன், தனது பக்கத்திலிருந்த மாணவர்களைக் கண்ணடித்தான். உடனே எல்லோரும் கூச்சலிட்டனர். மூர்த்தியால் இப்போது செய்வதற்கு ஏதுமில்லை. அந்த வளாகமே அலறியது. வெளியே நின்ற அரசியல்வாதிகள் பாதிதூரம் வந்துவிட்டார்கள். இதற்குள் போலீஸார் உஷாரானார்கள். ஒரு பகுதியினர் அரசியல்வாதிகளைக் கெஞ்சிக் கொண்டிருந்தபோது, இன்னொரு பகுதியினர் அந்த அடாவடி இடத்திற்குப் போனார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கில் எங்கேயோ பேசிவிட்டு அங்கே தனித்து வந்தார்.
“நீங்கல்லாம் ஸ்டூடண்ட்ஸ். என்ன நடந்ததுன்னு அமைதியா சொல்லுங்க.”
பிரமிளா சொல்வதற்கு முன்பே, பொன்முகன், பொறிந்து தள்ளினான்.
“நாங்க சீனியருங்க, சார். சீனியர்கள் முகத்துல கரி பூசணும்னே கொம்பு முளைக்காத பசங்கல்லாம் திட்டமிட்டு இந்த சுயம்புவை. எங்களுக்கே சீனியரான இவங்கள-இந்த பிரமிளாவை மொலஸ்ட் செய்ய அனுப்பியிருக்காங்க. ஏற்கெனவே இவன் ஒரு ஏடாகூடம். லேடீஸ்கிட்ட தப்புந்தவறுமா நடக்கிறவன்.”