மீதிக் கோபம். கிண்டல் செய்கிறான். கலாட்டா பண்ண வந்திருக்கிறான். இவனை விடப்படாது. என்னை யாருன்னு நெனைச்சுக்கிட்டான்...
அவள், குய்யோ முறையோ என்று கூப்பாடு போட வில்லை. நிதானமாக இறங்கினாள். ஸ்கூட்டருக்கு ஸ்டாண்ட் போட்டாள். வலதுகால் செருப்பைக் கழற்றினாள். அவன் தலையிலும் முகத்திலும் மாறி மாறி அடித்தாள். விடுதிப் பெண்களுக்கு இதுல பொறுக்க வில்லை. கீழே ஒடி வந்தார்கள். இதற்குள் சுயம்பு எந்த சொரணையும் இல்லாமல், “எதுக்காக அக்கா அடிக்கே. அப்படி என்னத்த நான் பெரிசா கேட்டுட்டேன். காலு வலிக்கேன்னுதானே கேட்டேன்” என்று கண் கலங்கக் கேட்டுக் கொண்டிருந்தான்.
இதற்குள், கும்பல் கூடிவிட்டது. வாக்களிக்கப் போனவர்கள்கூட அதுதான் சாக்கு என்று திரும்பிவிட்டார்கள். பொன்முகனும், ரதகஜ, துரக பதாதிகளோடு அங்கே வந்தான். சுயம்புவை உற்றுப் பார்த்தான். இவன் மூர்த்தியின் ஆள். லூசுப் பயல் என்றாலும், அன்றைக்கு அவமானப்படும்படி பேசியவன். விடப்படாது. எல்லாப் பயல்வளும் நமக்கு வோட்டுப் போடும்படியா செய்துடணும். இது ஒரு சென்ஸிட்டிவ் இஷ்யூ. நிறைய வோட்டுக் கிடைக்கும்.
பொன்முகன், புத்திசாலி. சுயம்புவை அடித்தால் தாய்க்குலம் அவன் பக்கம் போய்விடும் என்று தெரிந்து வைத்தவன். இன்னும் இந்தக் குலம் பெருமளவில் வாக்களிக்கப் போகாமல் வம்பளந்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் சுயம்புவின் தோளில் ஒரு கையைப் போட்டுக் கொண்டே, நிதானமாகக் கேட்டான்.
“ஏண்டா. நீ முளைச்சு மூணு எல விடலே. மீசை கூட மொளைக்கல. அப்படியிருந்தும் இப்படி நடந்துக்கிறே. லேடிஸ்னா ஒனக்கு அவ்வளவு கேவலமாப் போச்சு இல்லியா. இது என்ன அமெரிக்கான்னு நெனைச்சியா. கண்ணகி பிறந்த நாடுடா. ஒனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் அவங்களை இப்படி இம்சிப்பே. எனக்குத் தெரியும்டா. சீனியர் மாணவிகள், ஒன் மூர்த்திக்கு வோட்டுப் போட மாட்டாங்கன்னு தெரிஞ்சு, நீ வேணும்னே இங்க வந்து, கலாட்டா செய்யுறே. என்னடா நெனைச்சுக்கிட்டே...”
சுயம்பு, எதுவும் நினைக்காமல் சும்மா நின்றபோது, முத்துவும் மூர்த்தியும் அங்கே ஓடி வந்தார்கள். மூர்த்தி, பொன்முகத்தின் மோவாயைப் பிடித்துக் கொஞ்சியபடியே “இவன் லூசு அண்ணே. ஒங்களுக்கே தெரியும். விகற்பம் இல்லாமல் நடந்திருப்பான்... நான் அவங்ககிட்ட