“என்னப்பா பொல்லாத தப்பு. அசல் லூசன். வோட்டுப் போட ஸ்கூட்டர்ல ஏறிக்கட்டுமான்னு கேட்டிருக்கான். இதப் போய் ஒரு பெரிய விஷயமா...”
“இது பெரிய விஷயமில்லியா. இன்னிக்கு ஸ்கூட்டர்ல ஏறுறேன்னு கேட்டான். நாளைக்கு ரேப் பண்றேம்பான். இது என்ன காலேஜா, இல்ல இவன் அப்பன் வீட்டு அந்தப்புரமா... என்னய்யா பேச வந்திட்டே.”
இன்ஸ்பெக்டர், ரேப் என்ற வார்த்தையைக் கேட்ட உடனேயே பயந்துவிட்டார். கெஞ்சலோடு பேசினார்.
“இன்னிக்கு அடிச்சுக்குவீங்க... நாளைக்கு கூடிக்குவீங்க; வாங்க ரிஜிஸ்ட்ரார்கிட்டயே போவோம். அவரே விசாரிக்கட்டும். அன்லாபுல் அசெம்பளி கூடாது. மாணவர் தலைவர்களும், மேடமும் இந்த லுங்கிப் பையனும் வந்தால் போதும்.”
இன்ஸ்பெக்டர், மிடுக்காக நடந்தார். எல்லோரும் தங்களைத் தலைவர்களாய் அனுமானித்து, அவர் பின்னால் போனார்கள். பிரமிளா தயங்கினாள். பொன் முகன் உருட்டிய உருட்டலில் லேசாய் சுணங்கினாள். உடனே ‘நல்லா மாட்டிக்கட்டும்’ என்று நினைப்பதுபோல் நாலைந்து பெண்கள் அவள் முதுகைப் பிடித்துத் தள்ளி விட்டார்கள். ஆனாலும் கூட்டத்தில் பாதி கால் வலித்து இடையில் நின்றது. மூர்த்தியும் முத்துவும் கூடவே போனார்கள். சுயம்புவிற்கு எதையோ சொல்லிக் கொடுத்துக் கொண்டு போனார்கள். ரிஜிஸ்ட்ரார் என்கிற பதிவாளர் இன்ஸ்பெக்டருடன் வந்த மாணவ மாணவிகளை எழுந்து நின்று வரவேற்றார். ஏற்கெனவே நடந்த விவரங்களை பியூன் - ஒற்றர்கள் மூலம் தெரிந்து வைத்திருந்த அவர், எதுவும் தெரியாதது போல் ‘வாட் கேன் ஐ டு பார் யூ’ என்று வினவிவிட்டு, சோபா செட்டைக் கைகாட்டினார். அவரும் உட்கார்ந்தார். பொன்முகன், தான் பேசுவது, அங்கே மட்டுமல்ல, வாக்குப் பதிவுக்குச் செல்கிறவர்களுக்கும் கேட்கவேண்டும் என்பது போல் கத்தினான்.
“சார். இவன் லேசுப்பட்டவன் இல்ல சார். இந்தப் பிரமிளாவை மொலஸ்ட் செய்ய முயற்சி செய்திருக்கிறான் சார். நல்ல வேள, நாங்க போய் இவங்களைக் காப்பாத்துனோம் சார். இவங்க அப்பா மெட்ராஸ்ல செகரட்டேரியட்ல கல்வி இலாகாவிலே டெப்டி செகரட்டரி சார்.”