(Reading time: 14 - 27 minutes)
Vata malli
Vata malli

நீர் கொட்டின. “மேரா பத்தினி. மேரா பேட்டி, மேரா பேட்டா” என்று இலக்கணமற்ற இந்தியில் புலம்பியது. ‘சாக்லெட் நயி ஹை. இந்திராஜி ஹமாரா மாதாஜி ஹை’ என்று மாறி மாறிப் புலம்பியது. மேகலை அப்படியே அவரை அங்கே விட்டு வைத்தாள். சாப்பாடு கொடுக்கலாமா என்று யோசித்தாள். அவரது உணர்வுகளை அவமதிக்க அவள் விரும்பவில்லை. சோறு இறங்குமா...

  

மேகலைக்கும், லட்சுமிக்கும் தூக்கம் பிடிக்கவில்லை. தூக்கத்தையும் பிடிக்கவில்லை. கண்ணயரும் போது திடீர் ஓலங்கள். துப்பாக்கிச் சத்தங்கள்.

  

மறுநாள் காலை வந்தது. சேவல்கள்கூடக் கூவப் பயந்தன.

  

மேகலை, லட்சுமியையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டாள். சர்தார்ஜி கொடுத்த முகவரியை ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு, கதவைப் பூட்டி விட்டுப் புறப்பட்டார்கள். இடையில், குஞ்சம்மாவும் மார்க்கரெட்டும் வந்தார்கள். அம்மா கங்காதேவியைப் பற்றிக் கேட்டால், இன்னும் வரவில்லையா என்றார்கள். எதற்கும் நீலிமா இருக்கிறாளே என்று மேகலைக்கு ஆறுதல் சொன்னார்கள்.

  

அந்த நால்வரும், சர்தார்ஜி சொன்ன முகவரி இடத்தைத் தேடி, தற்செயலாய் நடப்பது மாதிரி நடந்தார்கள். சென்னா மார்க்கட்தான். கூப்பிடும் தொலைவுதான். ஆனாலும்... கடவுளே... இது என்ன... ஒரே ரத்த வாடை... எருக்குழிபோல் பிணக் குவியல்கள். கருகிப் போன தேகங்கள். பாதி வெந்த உடம்புகள். வயிற்றிலுள்ள மரணக் காயங்கள் தெரியாமல் சிரிப்பது போல் குப்புறக்கிடந்த குழந்தைகள். நிர்வாணமாய்க் கிடந்த பெண்கள். ஆங்காங்கே வாசல்களை இழந்த கடைகள். அங்குமிங்குமாய்ச் சிதறிக் கிடந்த விலை உயர்ந்த பொருட்கள். ஒரு லத்திக் கம்புகூட இல்லாத சூன்யம். ஆங்காங்கே கழுகுகள் வட்டமடித்தன. காகங்கள் கொத்திக் கொண்டிருந்தன. நாய்கள் தின்று கொண்டிருந்தன. மனிதச் சதை மேடுகள். உறைந்த ரத்தக் கட்டிகள். முண்டம் முண்டமாய். தலை. தலையாய்.

  

மேகலை பித்துப்பிடித்துப் போனாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். கூடவந்தவர்கள் ஓடப்போவது போலிருந்தது. இவளையும் இழுத்தார்கள். அவள் எதிர்ப்புறமாய் இழுத்தாள். பிறகு தான் மட்டும் நடக்கப்போவது போல் சைகை செய்தாள். உடனே லட்சுமி அவளுக்கு முன்னால் போனாள். குஞ்சம்மா பின்னால் வந்தாள். இடையிலே ஒரு வீடு. முதலாவது அறை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.