குழிகுழியான தேகத்தோடு ஒரு சர்தார்ஜி கிடக்கிறார். சுற்றிலும் நான்கைந்து பேர். அந்த ஆறு மாடிக் குடியிருப்பில் மருந்துக்குக்கூட, ஒருவர் வரவில்லை. அந்த சர்தார்ஜி இளைஞனை மடியில் போட்டு வைத்த இளம் பெண்ணோ பித்துப் பிடித்துக் கிடக்கிறாள். இன்னும் சிறிது நேரத்தில் அவளே தன் சேலையைக் கிழித்துக்கொள்ள வேண்டிய நிலைமை. பித்தப் பார்வை. சித்தம் இழந்த செத்தப் பார்வை...
மேகலை, ஒடிப்போய் உட்கார்ந்தாள். அந்தப் பெண்ணை அப்படியே கட்டிப்பிடித்து அழுதாள். அவள் முகத்தை தோளில் சாய்த்து, ‘நீ என் சகோதரி. தும் மேரே பெகன் ஹோ...’ என்று புலம்பினாள். அவளோடு மற்ற மூவரும் சேர்ந்துகொண்டு தலையில் அடித்துக் கொண்டார்கள். பிணத்தின் காலை ஒருத்தி பிடித்துக்கொண்டாள். மேகலை, தான் கட்டிப் பிடித்தவளைக் கண் மூடிப் பார்த்து, ‘ஒனக்கு யார் இல்லாவிட்டாலும் நாங்க இருக்கோம்’ என்று சொன்ன போது, அந்தப் பெண் ‘ஓ’வென்று அழுதாள். சுற்றி நின்றவர்களும் அந்தப் பிணத்துப் பக்கமாய் குவிந்து குவிந்து அழுதார்கள். மெள்ள மெள்ள வாய்திறந்து காவிரி நீரூற்றாய்ப் பீறிட்டு கங்கை நதிபோல அங்குமிங்குமாய் உடம்பைப் புரட்டிய அந்தப் பெண்ணை, மேகலையும், அவள் தோழிகளும் பிடித்துக் கொண்டார்கள். உடம்பு முழுவதிலும் ஒட்டிக்கொண்டார்கள். இதற்குள் ஒரு சில மாடிகளிலிருந்து, ஒரு சிலர் இறங்கினார்கள். அவர்களைப் பார்த்த மேகலைக்குக் கோபம் வந்தது. கையிலிருந்த வளையல்களைக் கழற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய்க் கொடுக்கப் போனாள். குஞ்சம்மா பிடித்துக்கொண்டாள். இதற்குள் கணவனைப் பறி கொடுத்த சர்தாரிணிப் பெண், மேகலையை விட்டுப் பிரிய மனமில்லாமல் கட்டிப்பிடித்துப் புரண்டாள். கத்தினாள், கதறினாள். கணவன் முகத்தை முத்தினாள். மோதினாள்.
மேகலை சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டாள். சர்தார்ஜி முகவரி கொண்ட வீட்டிற்குத் தற்செயலாக போவது போல் போனாள். அங்கே வெளியில் தோழிகளை நிறுத்திவிட்டு, உள்ளே போகிறாள். ஆளுக்கு ஒரு பக்கமாய்ச் சிதறிக் கிடப்பவர்களிடம் ‘ஆப்கா பிதாஜி ஹர்பஜன்சிங் ஹமாரா கர் மே டீக்ஹை...’ என்கிறாள். அந்தக் குடும்பம் கடைசிவரைக்கும் உயிரைக் கையில் பிடித்திருப்பதுபோல் அவள் வாயைப் பார்க்கிறது. ‘டீக்ஹை’ என்றவுடன் விவரம் கேட்கிறது. பிறகு ஒருத்தி உள்ளே ஓடிப்போய் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து மேகலையிடம் நீட்டினாள். இப்படி வந்தது கோபம் அவளுக்கு.
“நாங்க ரூபாய்க்கு ஆசைப்பட்டு வரலை. அப்படி ஆசைப்படுறதுக்கு நாங்க ஆணுமில்ல. பெண்ணுமில்ல. உங்களுக்குப் பணம் வேணுமானால், கேளுங்க. இங்கயே தாரோம்...