பார்த்தாலும் அதிர்ச்சியாகப் பார்க்கவில்லை. அந்தக் கடித விவரம், அவர்களுக்கும் தெரியும். வீட்டிலிருக்கும் போது வாயில் புடவையைக் கட்டிக் கொண்டிருக்கும் பச்சையம்மா, மகள் வாங்கிக் கொடுத்த ஒரு பட்டுச் சேலையைக் கட்டிய படியே மேகலையை ஒரு மாதிரி பார்த்தாள். அவள் முகத்தில் இன்னும் மினுக்கம் இல்லையென்றாலும், கிறக்கமும் இல்லை. அவள் பார்வையைப் புரிந்துகொண்ட மேகலை சிறிது கண்டிப்போடே பேசினாள்.
“பேசாமல் இங்கேயே இரும்மா... ஏகப்பட்ட நோய். இன்னும் ஊசி போடவேண்டியிருக்கு... இந்த டாக்டர் மாதிரி எந்த டாக்டரும் வராது. இன்னும் ஒனக்கு மெட்ராஸ் வாடை போகலியா... பட்டது போதாதா... குருவக்கா அங்க இருக்க வேண்டியதால இருக்க வச்சிருக்கேன்... லட்சுமிக்காவக்கூட கூட்டிட்டுப் போகலை. இந்த நீலிமாவை அவளுக்காகவே கூட்டிட்டுப் போறேன். அம்மா இறந்துட்டான்னு கல்கத்தாப் பக்கம் சொந்த ஊருக்குப் போனவளை அண்ணன் தம்பிங்க கழுத்தைப் பிடிச்சு வெளியில தள்ளிட்டாங்க. அவளால, மானபங்கம் என்கிறதைவிட, சொத்து பங்கம் வந்துடு மோன்னு பயம். அதனாலயே இவள் பித்துப் பிடிச்சுக் கிடக்கிறாள். லட்சுமிக்கா! அதோ காந்தி, காரல்மார்க்ஸ், ஹெலன் கெல்லர், படம் போட்ட புத்தகங்கள் இருக்கு பாரு... எல்லாவற்றையும் எடுத்து பெட்டிக்குள்ள வைக்கா. ஏன் அப்படிப் பார்க்கே...”
“உன்னப் புரிஞ்சுக்கவே முடியலைடி. கூத்தாண்டவர் கோயிலுல குழந்தையா மாறி அப்படி லூட்டி அடிச்சே, மெட்ராஸ்ல என்னடான்னா சப்-இன்ஸ்பெக்டருக்கு சஸ்பெண்ட் வாங்கிக் கொடுத்தே. எல்லா தமிழ்ப் பத்திரிகைகளையும் நம்ம பிரச்னையைப் பத்தி பெரிசா செய்தி போட வச்சே... ஆனாலும், நம்ம ஊருக்காரங்க எச்சிக்கலை புத்தி அவங்கள விட்டுப் போகாது. ஒரு பேப்பர்ல ‘அலி அழகிகளின் ஆர்ப்பாட்டம் படு தமாஷ்’னு போட்டான் பாரு. நம்ம பிரச்னையவிட அவனுக்கு நம்ம நெளிவு சுழிவுதான் பெரிசாப் போச்சு. அவன் வீட்ல ஒரு பொட்டை விழ. ஆனாலும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால், தமிழ்ப் பத்திரிகைங்க நம்ம தலை நிமிர வச்சிட்டு.”
குஞ்சம்மாவினால் சும்மா இருக்க முடியவில்லை. பி.டி.ஐ., யு.என்.ஐ. ஏஜென்ஸிகளால் நாடு முழுக்க இந்தச் செய்தி எப்படியோ ஒருவிதத்தில் வந்தது அவளுக்குத் தெரியாது. ஆனால், மலையாளத்தில் வந்தது நல்லாவே தெரியும். என்ன நெனெச்சுக்கிட்டாள் இந்த லட்சுமி...
“ஏ.டீ... பிராந்தி... தமிழ்நாடு, மாத்ரம் ஆனோ... பத்திரிக்கை உள்ளன்னு விஜாரிக்கலே... எங்கட...