மலையாளத்துல... கூடியும் வந்துட்டுண்டு...”
மேகலை, அந்தக் காகிதப் புலிகளைக் கையாட்டித் தடுத்தபோது, பச்சையம்மா, தான், அவளோடு போக வேண்டியதன் அவசியத்தைக் கடைசி நிமிட முயற்சியாகச் சொன்னாள்.
“ஊருக்காக இப்பவே வேட்டி சட்டையில நிக்கே... கொண்டைய எப்படி மறைக்க முடியும். இந்த நீலிமாவுக்கு என்ன தெரியும்? நான் கூட வந்தால், தலைக்கு முண்டாசு கட்டிவிடுவேன். நீலிமாவ என் மகள்னு சொல்லி, ஒனக்கு அந்த நாலு நாளைக்கும் மாமியார் மாதிரி நடிப்பேன். யோசிச்சுப் பாரு...”
“யோசிக்கிறதுக்கு எதுவுமில்ல பச்சை. ஒரு பெரிய டோபாவ வாங்கி கொண்டைய உள்ளுக்குள்ள திணிச்சிடலாம்.”
“லட்சுமிக்கா... அம்மாவ பொட்டையா கூப்பிடாதே. நீ சொல்ற டோபாவோ... அக்கா சொல்ற முண்டாசோ தேவையில்ல. என் தங்கைக்கு நல்ல இடத்தில முடிஞ்சால் மொட்டை போடுறதாய், பழனி மொட்டையாண்டி கிட்ட வேண்டிக்கிட்டேன். போகும்போதே மொட்டை போட்டுக் கிட்டுத்தான் போகப்போறேன்!”
“என்னடி இது அக்கிரமம்... யாரக் கேட்டு இப்படி நேர்ந்தே... கண்ணாடி முன்னால ஒவ்வொரு முடியா, நீவி ரசிப்பியே... இன்னும் விட்டால், தலையைக் கூட வெட்டிக்கிறேன்னு வேண்டுவே போலிருக்கே...”
மேகலை, லட்சுமியக்காவைப் பார்த்து மீண்டும் சிரித்தாள். எல்லோரும் அவளை பிரமித்துப் பார்த்த போது, அவள் தன்னை ஒரு சாதாரண மனுஷியாக காட்டிக்கொள்ள நினைத்து, தலையை சிறிது குனிந்தாள். அவள் படித்த ஒரு காந்தியப் புத்தகத்தில், ‘ஒருத்தர்’ பிறரிடம் தன்னைப்பற்றி எந்த பிரமிப்பையும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. தோழமை உணர்வே மேலோங்கி நிற்கணும். அவர்களும், நம்மைப்போல் ஆக முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது அடிக்கடி நினைவுக்கு வருவது போல் இப்போதும் வந்தது. லட்சுமியக்காவின் தோளில் ஒரு கையும், மார்கரெட்டின் தோளில் இன்னொரு கையும் போட்டபடி பொதுப்படையாகச் சொன்னாள்.