உங்கள் உதவி மட்டும் இல்லையானால், மொட்டை மரமாய் முடிந்திருப்பேன். ஒருவேளை நமது அக்காவின் நிலமை எனக்கும் வந்திருக்கலாம். எப்படியோ எல்லாம் நல்லபடியாய் முடியப்போகிறது. என்னடா ஊருக்கு வரப்போகிற தனக்குத் தங்கை இப்படி ஒரு கடிதம் எழுதுகிறாளே என்று நீங்கள் நினைக்கலாம். அதற்குக் காரணமும் இருக்கிறது.
“அண்ணன் உங்களை எப்படியாவது கலியாணத்திற்கு வரவழைக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறான். அவன் படிக்காதவன். அறிவிலி. ஆனால் நீங்கள் படித்தவர், பண்பாளர், என்னதான் வேட்டி சட்டையோடு வந்தாலும், உங்கள் பேச்சும் நடையும் ‘அவர்களுக்குக்’ காட்டிக் கொடுத்துவிடலாம். என் வாழ்க்கை மரகதக்காவாக முடியலாம். அப்புறம் உங்கள் இஷ்டம். என்னை எப்படி பஸ் நிலைய சமாச்சாரத்தில் காட்டிக் கொடுக்கவில்லையோ, அப்படி இந்த கடித விஷயத்திலும் காட்டிக் கொடுக்க மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
“என் வாழ்வு நீங்கள் போட்ட பிச்சை. இந்தப் பிச்சைக்காரியை எங்கிருந்தாலும் வாழ்க என்று அங்கு இருந்தபடியே வாழ்த்தியருளும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களின் உயிருக்கு உயிரான சகோதரி
மோகனா.”
மேகலை, அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு தடவை படித்துவிட்டு, தலையை அங்குமிங்கும் ஆட்டினாள். லட்சுமி அதைப் படித்துவிட்டு, மற்றவர்களுக்கு அதன் விபரத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது மேகலை, அக்காவின் படத்தையே பார்த்தாள். பார்க்கப் பார்க்க அழுகை கொட்டக் கொட்டக் கண்ணீர்! நீர்வார் முகத்தோடு, தனக்குள்ளே சிறிது முனங்கிக் கொண்டாள். பிறகு கண்ணீரைச் சுண்டிவிட்டு, சர்வ சாதாரணமாய்ப் பேச முயற்சித்தாள்.
“நீலிமா அதே கார்ல போய். நம்ம டிக்கெட்ட கான்ஸல் செய்துட்டு வந்துடு... இன்னும் வெயிட்டிங் லிஸ்ட்ல பெயர் இருக்கிறதால முழுப்பணமும் கிடைக்கலாம். ஜல்தி. குயிக்...”
மேகலை, தன்னைத் தவித்துப் பார்த்தவர்களுக்கு பட்டும் படாமலும் பதிலளித்தாள். ‘மகளே மகளே... நானிருக்கேன் மகளே... நாங்க இருக்கோம் மகளே’ என்று புலம்பிய பச்சையம்மாவின்