முதுகைத் தட்டிவிட்டு கோபத்தில் கால்களைப் போட்டுத் தரையில் மிதிக்க விட்ட நீலிமாவை இழுத்துப் பிடித்துக்கொண்டு, மேகலை அழுகைச் சிரிப்போடு சொன்னாள்.
“என் செல்லத் தங்கச்சி, என்னை நான் காட்டிக் கொடுத்து விடுவேன்னு தன்னைத்தானே காட்டிக் கொடுத்துட்டாள். அவள் பயமும் நியாயமானதுதான். பெரும்பாலானவங்க தங்கள மையமா வச்சுத்தான் மத்தவங்களை நினைக்காங்க. நல்லவேளை. அவள் ஒருத்தி மட்டும் எனக்கு சகோதரி இல்லே. நீங்கெல்லாம் யாராம்! நீலிமா... ஜல்திம்மா...”
நீலிமா புறப்படப் போனாள். இதற்குள் ‘கூரியரில்’ ஒரு கடிதம். குருவக்கா கடிதம். நீலிமாவை லேசாய் கையமர்த்திவிட்டு அந்தக் கடிதத்தின் மீது ஒட்டு மொத்தமான பார்வையைப் போட்ட மேகலை, இப்போது ஒவ்வொரு வரியாகப் படித்தாள்.
“என் கூடப் பிறக்காத பிறப்பே!
“சொகமா இருக்கியா? பச்சையம்மா செளக்கியமா... ஒன் தோழிகள் சுகமா...
“நீ நம்ம சனங்கள, கூப்பிட்டு வச்சு பேசுனதில் எல்லோருக்கும் சந்தோஷம். நாம், ரெண்டுபேரும் பேட்டை பேட்டையாய் போய் பேசிவிட்டு, அப்புறம் ஒரே இடத்துல கூடி, சில முடிவு எடுத்தோமே, அது சீரா நடந்துக்கிட்டிருக்கு. நாதியில்லாமப் போன, நமக்கு நீ ஜோதியாய் வந்திருக்கேன்னு எல்லாப் பேட்டையிலயும், நம்ம ஆட்கள் பேசறாங்க. நம்ம சங்கத்துக்கு நிலமும் பார்த்துட்டோம். இப்போதைக்கு அதுல ஒரு நல்ல குடிசையா போட்டுக்கலாம். அதோட சங்கத்தை நீதான் திறந்து வைக்கணும் என்கிறது நம்ம ஜமாவோட தீர்ப்பு. நமக்கும், சர்க்கார்ல வேலைக்கு இடம் ஒதுக்கணும்... குடியிருப்பு தரணும்... உதவித் தொகை வழங்கணும்... எல்லாவற்றுக்கும் மேல போலீஸ் பொய்க்கேசு முடிவுக்கு வரணும்னு நீ பேசுனது நம்ம ஆட்கள் எல்லோருடைய காதிலயும் இன்னும் கேட்டுக்கிட்டே இருக்கு...
“ஆனாலும்... நம்ம ஜனங்ககிட்ட கொஞ்சம் தடுமாற்றம். அலித்தன்மை மாதிரி - அது உடம்போட ஒட்டுனது. இந்தப் பயம் அனுபவத்தோட ஒட்டுனது. போலீஸ் கமிஷனரே, நேர்ல வந்து விசாரிச்சுட்டுப் போனார். பயப்பட வேண்டாம்னு எல்லாப் போலீஸ் அதிகாரிகளையும் பக்கத்துல வச்சுக்கிட்டே சொன்னார். ஆனாலும், ஒரு வாரத்துலேயே போலீஸ் ‘புத்தியக்’