“வீட்ட பத்திரமா பாத்துக்குங்க... இந்திரபுரி வீட்டு வாடகைய முதல் தேதியே வாங்கிடுங்க... யாராவது உதவிக்கு வந்தால், கையில இருக்கத கொடுங்க. ஒங்களயும் இவ்வளவு பெரிய வீட்டையும் விட்டுட்டுப் போக சங்கடமாத்தான் இருக்கு...”
“இதுக்குத்தான் நீயும் ஒரு மகள சுவீகாரம் செய்யனும் என்கிறது...”
“தேவையில்ல அம்மா. எனக்கு என் அலித்தன்மையே மகள். அந்த அலித்தன்மை யார் யாரிடமெல்லாம் ஊடுருவி நிற்கோ, அவங்க எல்லாமே என் வாரிசுகள்தான். சரி, சரி, பிதாஜி கார் வந்திட்டு. நீலிமா ஒன் முகத்துக்கு எத்தனை தடவை பெயிண்டடிப்பே...”
“ஆமா, நீலிமாவுக்கு அங்க போயி பாண்ட் சர்ட் கொடுக்கப் போறியா...”
“இல்ல.இப்படியேதான் வருவாள். பார்க்கிறவங்க அவள என் ஃபாரின் பெண்டாட்டின்னு நினைச்சுட்டுப் போகட்டுமேடி.”
எல்லோரும் சிரித்தார்கள். நீலிமா, தனது மேக்கப்பைத்தான் அவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்று உதட்டில் ஓவராய்ப் போன லிப்ஸ்டிக்கைத் துடைக்கப் போனாள். மேகலை, அவசரப்பட்டு, அவசரப் படுத்தினாள். “ஜல்தி, நீலிமா.. .ஜல்தி. நாம் போகப்போறது பட்பட் வண்டி இல்ல. ட்ரெயின்.”
நீலிமா, சூட்கேஸ்களைத் தூக்கிக்கொண்டு மேகலையுடன் புறப்படப் போனபோது தபால்காரர் ஒரு கத்தை காகிதங்களைப் போட்டு விட்டுப் போனார். பெரும்பாலானவை பத்திரிகைகள். குரு அலிகளின் விழா நிகழ்ச்சிகள்... அதற்குள்ளே ஒரு இன்லண்ட் கவர். எடுத்துப் பார்த்தால் மோகனா பெயர். படித்துப் பார்த்தாலோ
“என் அன்புள்ள அண்ணன் அல்லது அக்காவுக்கு,
“மோகனாவின் வணக்கம்.
“நீங்கள் என்னிடம் காட்டிய கருணைக்கு, நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்.